ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.. டிடிவி தினகரன் குற்றச்சாட்டு.. கொரோனா நோயாளிகளை காக்க கோரிக்கை
சென்னை: ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்று சொல்லும் அளவுக்கு, தமிழக சுகாதாரத்துறை நிலவரம் இருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும், படுக்கை கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில்தான், டிடிவி தினகரன் டுவிட்டர் வாயிலாக நடைபெறும் நிகழ்வுகள் குறித்து தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்..
|
டிடிவி தினகரன் ட்வீட்
இதுகுறித்து டிடிவி தினகரனின் டுவிட் தொகுப்பு இதோ: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நிகழும் அவலங்கள் குறித்த டாக்டர் ஒருவரின் வீடியோ பதிவு வேதனை தருகிறது. கொரோனா பேரிடரின் துயரத்தை விட, அதற்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் மக்கள் அலைக்கழிக்கப்படுவது மிகுந்த மன வலியை ஏற்படுத்துகிறது.

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை
'ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை'என்ற எண்ணம் மக்களிடம் எழத்தொடங்கியுள்ளது. எனவே, அரசு மருத்துவமனைகளில் முறையான வசதிகள் இல்லாமலும், மின்வெட்டினால் வெண்டிலேட்டர் இயங்காமலும் நோயாளிகள் உயிரிழப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக செய்திட வேண்டும்.

சிகிச்சையளியுங்கள்
முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தினகரன் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு தீவிரம்
இதனிடையே, தமிழகத்தில் ஊரடங்கு மேலும் தீவிரமாகும் என்றும், மதுரை அடுத்த தோப்பூரில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications