விவசாயிகள் வயிற்றில் அடிப்பதா.. கெயில் குழாய் பதிப்புக்கு டிடிவி தினகரன் கண்டனம்
சென்னை: விவசாய நிலங்களை அழித்துவிட்டு எரிவாயு குழாய் பதிக்கிற வேலைகளை மத்திய அரசின் கெயில் நிறுவனம் மேற்கொண்டு வருவது கண்டனத்துக்குரியது என அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மேலமாத்தூரிலிருந்து நரிமணத்துக்கு எரிவாயு எடுத்துச் செல்ல கெயில் நிறுவனம் குழாய் பதிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக மேமாத்தூர், செம்பனார்கோவில், காளஹஸ்திநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாயி நிலங்களின் வழியாக குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
குழாய்
ஆனால் இப்பகுதிகளில் விவசாயிகள் குறுவை சாகுபடியைத் தொடங்கியுள்ளனர். பல வயல்களில் குறுவை பயிர்கள் இளம்பயிர்களாக உள்ள நிலையில் கெயில் நிறுவனத்தின் குழாய்களை பதிப்பால் பயிர்கள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
போராட்டம்
இந்த திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டம் நடத்திய 8 பேர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த திட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கெயில் நிறுவனம்
இந்த நிலையில் இதுகுறித்து டிடிவி தினகரன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் விவசாயம் ஏற்கெனவே நலிவடைந்துள்ளது. அதை அழிக்கும் வகையில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்களை பதிப்பது ஏன்.
டிடிவி தினகரன்
விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிற இந்த பணியை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறுத்த வேண்டும். விவசாயத்தை அழிக்கும் செயலை கெயில் நிறுவனம் மூலம் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார்.