பொன்முடி மீது சேறு வீச்சு.. விரட்டி விரட்டி கைது செய்த போலீஸ்! டிடிவி தினகரன் கண்டனம்
சென்னை: ஃபெஞ்சல் புயல் பாதிப்பினை பார்வையிட சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் இன்று சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கைக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, "அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதற்காக பொதுமக்களை கைது செய்து பழிவாங்குவதா ? ஆதங்கத்தை வெளிப்படுத்திய பொதுமக்கள் மீது அடக்குமுறையை கையாண்டிருக்கும் திமுக அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

வனத்துறை அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதாகக் கூறி விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிலரை வீடுபுகுந்து காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பின் போது தங்களை சந்திக்க வராத அமைச்சர் பொன்முடி மீது ஆதங்கத்தை வெளிப்படுத்திய பொதுமக்களை காவல்துறையினர் மூலம் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
சாத்தனூர் அணையிலிருந்து முன் அறிவிப்பின்றி திறக்கப்பட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான கன அடி நீரால் இரவோடு இரவாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்த மக்களுக்கு முறையான நிவாரணம் கூட வழங்கப்படாத நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் மீதே மீண்டும் அடக்குமுறையை கையாண்டிருப்பது திமுக அரசின் அதிகாரப்போக்கையே வெளிப்படுத்துகிறது.
எனவே, காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, இனி வரும் காலங்களில் அப்பகுதி மீதான பழிவாங்கும் நடவடிக்கையையும் கைவிட வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஃபெஞ்சல் புயல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக விழுப்புரத்தில் மீட்பு பணிகள் எதுவும் முறையாக நடைபெறவில்லை என்று கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரத்தின் அரசூர் மற்றும் இருவேல்பட்டு என இரண்டு ஊர்களில் இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்து சமாதானம் பேச அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் முன்னாள் எம்பியுமான கௌதம் சிகாமனி சென்றிருந்தார். அப்போது அவர்கள் மீது சேறு வாரி வீசப்பட்டது.
இது தொடர்பாக திருவெண்ணெய்நெல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டிருந்தனர். விசாரணையின் போது இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்த பாஜக பெண் நிர்வாகி ஒருவர், இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தை நாடியிருந்தார். ஆனால் நீதிமன்றம் முன்ஜாமீனை மறுத்துவிட்டது. இப்படி இருக்கையில், இன்று காலை இந்த கிராமத்தில் சிலரை போலீசார் விசாரணைக்காக கைது செய்ய முயன்றனர். ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைதாக மறுத்து முரண்டு பிடித்தனர்.
இதனையடுத்து அவர்களை போலீசார் விரட்டி விரட்டி கைது செய்தனர். இது தொடர்பான வீடியோக காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவியது. இதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications