போதை மாஃபியா.. முக்கிய காரணமே டாஸ்மாக்தான்! மொத்தமா இழுத்து மூடுங்க - டிடிவி தினகரன் ஆவேசம்
சென்னை: வேலூர் மாவட்டம் காகிதப் பட்டறை பகுதியில் ஒரே தெருவில் இயங்கும் ஆறு மதுபானக் கடைகளால் அதிகரிக்கும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுவதாகவும், பொதுமக்களை பாதிப்புக்கு உள்ளாக்கும் மதுபானக் கடைகளை அகற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட காகிதப் பட்டறை பகுதியைச் சேர்ந்த 28 வது வார்டில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் மட்டும் ஆறு மதுபானக் கடைகள் இயங்கி வருவதால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் நாள் தோறும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. மதுக்கடைகள் திறக்கப்படும் நேரம் தொடங்கி வார்டு முழுவதுமே மது குடிப்பவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதால், வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுவதாகவும், இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் மதுபானக் கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதியில் வசிக்கும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்து உள்ளனர்.

வீதிக்கு வீதி திறக்கப்பட்டு இருக்கும் மதுக் கடைகளால் பொது மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதோடு, தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து இருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அரசு தடுக்க தவறியதன் விளைவாக நேற்று ஒரே நாளில் மட்டும் மதுரை மற்றும் சென்னையில் ரூ.180 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
ஆகவே, பொது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இயங்கி வரும் மதுபானக் கடைகளைக் கணக்கெடுத்து அவற்றை உடனடியாக மூட நடவடிக்கை எடுப்பதோடு, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் போதைப் பொருட்களின் தாராள நடமாட்டத்தை இனியாவது தீவிர சோதனையின் மூலம் கண்டறிந்து அவற்றை முற்றிலுமாக ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications