அமமுகவுடன் இருப்பது தொண்டர் படை.. பழனிச்சாமியுடன் இருப்பது டெண்டர் படை.. இதுதான் டிடிவியின் ரைமிங்!
சென்னை: அமமுகவுடன் இருப்பது தொண்டர் படை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் இருப்பது டெண்டர் படை என்றும் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்காக அண்மையில் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த நிலையில் எதிர்வரும் சட்டசபைத் தேர்தலுக்கு பிறகு அமமுக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைப் பற்றி அண்ணன் பழனிசாமி திருவாய் மலர்ந்திருக்கிறார். அமமுகவில் இருப்பது தொண்டர் படை! அம்மாவின் கட்சியை மீட்க போராடும் லட்சியப் படை! தேர்தல் அரசியலைத் தாண்டி இப்படை எப்போதும் களத்தில் நிற்கும்.
பழனிசாமியோடு இருப்பது வெறும் டெண்டர் படை! ஆட்சி அதிகாரம் இருக்கும் வரை மட்டுமே அது அவரோடு ஒட்டிக் கொண்டிருக்கும். அதன்பிறகு என்னவாகும் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்." என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications