Sasikala: 3 மாதத்தில் புதிய கட்சி தொடங்க முடியாது! சசிகலாவை நம்பாதீர்கள்! மறைமுகமாக தினகரன் அட்டாக்
சென்னை: 3 மாதத்தில் புதிய கட்சி தொடங்குவதற்கு சாத்தியமே இல்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மறைமுகமாக சசிகலாவை விமர்சித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் ஓபிஎஸ்ஸையும் அவர் கடுமையாக சாடியிருந்தார்.
தஞ்சையில் கும்பகோணத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எம்எல்ஏ ஐயப்பன், முதல்வர் ஸ்டாலினை வாழ்த்தி பேசியது, திமுகவில் இணைவது அவரது தனிப்பட்ட விருப்பம்.

தொண்டர்கள் தெய்வமாக போற்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக பேசியது கோடிக்கணக்கான தொண்டர்களும், பொது மக்களும் ஏற்க மாட்டார்கள். ஓபிஎஸ் மக்கள் பணியார்ற வேண்டும் என்றால் இன்னொரு கட்சிக்கு செல்லலாம்.
ஆனால் ஜெயலலிதா இருந்தவரை பரதனாக நடித்துவிட்டு அவரது மறைவுக்கு பிறகு கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிராக 2017ஆம் ஆண்டு திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தவர் ஓபிஎஸ்.
எனினும் ஓபிஎஸ்ஸை பெருந்தன்மையாக பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டு எடப்பாடி பழனிசாமியிடம் பேசி துணை முதல்வர் பதவியில் ஓபிஎஸ்ஸை உட்கார வைத்தார். ஓபிஎஸ்ஸை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்த போது கட்சியின் சட்டத்தை எப்படி உருவாக்கினார்கள் என்பது அவருக்குத் தெரியும்.
ஓபிஎஸ் தனக்கு பதவி வேண்டும் என்றால் எதையும் செய்ய துணிந்து விட்டார். ஓபிஎஸ் திமுகவில் சேரட்டும், பதவிக்கு வரட்டும், வராமலும் போகலாம். ஆனால் இதை மக்கள் தீர்மானிப்பார்கள். எம்ஜிஆர். ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவிப்பதை மன்னிக்கவே முடியாது.
இதைவிட சிறப்பு, துரியோதன கும்பல் போல பேசியதை முதல்வர் கைத்தட்டி ரசித்தது புன்முறுவலாக இருந்தது. இதற்கேற்ப ஓ.பி.எஸ்., ஐயப்பன் இருவரும் நடந்துகொண்டது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவருக்கும் இதைவிட தீங்கை யாரும் இழைக்க முடியாது.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி ஒரு கட்சியை பதிவு செய்ய குறைந்தது 6 மாதங்கள் ஆகும். என்னதான் அவசரப்படுத்தினாலும் 3 மாதங்களில் அது முடியாது. எனவே யாராவது உங்களிடம் கட்சி ஆரம்பிப்பாக சொன்னால் அதை நம்ப வேண்டாம் என சசிகலாவின் பெயரை சொல்லாமல் மறைமுகமாக சாடினார்.
ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம் தேதி சசிகலா புதிய கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அன்றைய தினம் அவரது கட்சியில் அதிமுக, அமமுகவில் அதிருப்தியில் இருப்போர் இணைய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் 30 தொகுதிகளை குறி வைத்து கட்சி தொடங்கியதும் தவெகவுடன் கூட்டணியில் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளார் என சொல்லப்படுகிறது.
சசிகலா தனிக்கட்சி தொடங்கி வரும் தேர்தலில் குறி வைக்காவிட்டாலும் அடுத்தடுத்த தேர்தல்களில் குறி வைக்க வாய்ப்பிருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த புதிய கட்சி மூலம் அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளையும் அமமுகவில் இருப்போரையும் சசிகலா, அக்கட்சியில் இணைத்துக் கொள்வார் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications