தூத்துக்குடிக்கு ஜாக்பாட்! குலசை விண்வெளி பூங்காவால் வேலைவாய்ப்பு குவியும்.. இளைஞர்களே ரெடியா இருங்க
சென்னை: தூத்துக்குடி குலசையில் விண்வெளி பூங்கா அமைப்பது மிகப்பெரிய செயல் என்றும், இதனால அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறியுள்ளார். மேலும் அந்த ஏரியாவே டெவலப் ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழக அரசின் 2024 - 2025 ஆம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி தாக்கல் செய்தார். அப்போது வான்வெளி சார்ந்த தொழிற்சாலைகளை ஊக்குவிக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு புதிய விண்வெளி தொழில் மற்றும் உந்து சக்தி பூங்கா டிட்கோ நிறுவனத்தால் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்தார்.

ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தான் பட்ஜெட்டில் இந்த புதிய அறிவிப்பு இடம்பெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் விண்வெளி தளத்தை இஸ்ரோ நிறுவனம் உருவாக்கி வருகிறது. எனவே அதனையொட்டிய பகுதிகளில் வான்வெளி சார்ந்த தொழிற்சாலைகளை ஊக்குவிக்கும் விதமாக 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு புதிய விண்வெளி தொழில் மற்றும் உந்து சக்தி பூங்கா டிட்கோ நிறுவனத்தால் அமைக்கப்படும் என்று அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் இந்த விண்வெளி பூங்காவில் தூத்துக்குடி வளர்ச்சியடையும் என்றும், இதனால் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறினார். இது தொடர்பாக சிவன் கூறியதாவது:-
தூத்துக்குடி குலசையில் விண்வெளி பூங்கா அமைப்பது மிகப்பெரிய செயலாகும். இந்த விண்வெளி பூங்காவால் இங்கு நிறைய நிறுவனங்கள் வர வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இதனால் இங்கு வேலைவாய்ப்புகள் அதிகம் இருக்கும். அந்த ஏரியாவே டெவலப் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
இஸ்ரோவின் அடுத்த திட்டம் என்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த சிவன், "ககன்யான் திட்டம் தான். இதற்கான பணிகள் தான் நடந்து கொண்டு இருக்கிறது. முதலில் ஆள் இல்லா விண்கலத்தை முதலில் அனுப்பி டெஸ்ட் செய்வாங்க" என்றார்.












Click it and Unblock the Notifications