தவெக மாவட்ட செயலாளர்கள்.. 2வது லிஸ்ட்டை வெளியிட்டார் விஜய்.. நிர்வாகிகளுக்கு பறந்த முக்கிய ஆர்டர்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் இரண்டாம் கட்டமாக, 19 கழக மாவட்டங்களுக்கு, மாவட்டப் பொறுப்பாளர்கள் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இன்று பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார் தவெக தலைவர் விஜய்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வரும் 2026 சட்டசபை தேர்தலில் களம் காண இருக்கிறது. தவெக தலைவர் விஜய் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதற்கு முன்பாக, கட்சியின் கட்டமைப்பு பணிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி நிர்வாகிகளுடன் கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு முதல் 19 மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாக வசதிக்காக 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, முதல்கட்டமாக 19 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு நியமன ஆணையுடன், வெள்ளி நாணயம் வழங்கி விஜய் வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இன்று இரண்டாம் கட்டமாக மீண்டும் 19 மாவட்ட பொறுப்பாளர்கள் கொண்ட பெயர் பட்டியலை தவெக வெளியிட்டுள்ளது. இன்றும் நிர்வாகிகளுக்கு நியமன ஆணையுடன், வெள்ளி நாணயம் வழங்கி வாழ்த்தி உள்ளார் தவெக தலைவர் விஜய்.
சென்னை புறநகர் - ஈ.சி.ஆர் சரவணன், தென் சென்னை தெற்கு - தாமு என்கிற தாமோதரன், புதுக்கோட்டை - பர்வேஸ், நாகை- சுகுமார், தருமபுரி மேற்கு- சிவா, கள்ளக்குறிச்சி மேற்கு- பிரகாஷ், கன்னியாகுமரி மத்திய மாவட்டம்- கிருஷ்ணகுமார், அம்பத்தூர்- பாலமுருகன், மதுரை மேற்கு- தங்கபாண்டி உள்ளிட்டோர் மாவட்ட செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் சமூக வலை தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழக வெற்றிக் கழகத்தில் இரண்டாம் கட்டமாக, 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இன்று பனையூரில் கட்சி நிர்வாகிகள் உடனான ஆலோசனையின் போது பேசிய விஜய், மாவட்ட பொறுப்பாளர்கள் குறித்து கட்சி தலைமைக்கு புகார்கள் வரும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தலைமை தயங்காது என எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கட்சிக்காக உழைக்கும் அனைவருக்கும் உரிய நிர்வாக வாய்ப்பையும், பிரதிநிதித்துவத்தையும் வழங்க வேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்களுக்கு தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி நிச்சயமாக வெற்றி பெறும் என்றும், கட்சி நிர்வாகிகள் கட்சிக்கு உண்மையாக நேர்மையாக உழைக்க வேண்டும் என்றும் தெரிவித்ததாக சன் நியூஸ், நியூஸ் 18 உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.












Click it and Unblock the Notifications