பிடி கொடுக்காத விஜய்.. தவெகவை கை கழுவிய பாஜக.. அண்ணாமலை சொன்ன வார்த்தை.. இனியும் வாய்ப்பில்லை!
சென்னை: கரூர் விவகாரம் மூலமாக தவெக தலைவர் விஜய்யை நெருங்கிவிட முடியும் என்று பாஜக கணித்திருந்த நிலையில், அது கை கூடவில்லை என்று பார்க்கப்படுகிறது. நாங்கள் என்ன தவெகவின் மார்க்கெட்டிங் அதிகாரிகளா என்று அண்ணாமலை கொந்தளித்திருப்பதன் மூலமாக, பாஜக உடன் இணைய விஜய் விரும்பவில்லை என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
கரூரில் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தவெக தலைவர் விஜய்க்கு பாஜக நேரடியாகவே ஆதரவு தெரிவித்தது. தவெக தலைவர் விஜய் தங்களின் கொள்கை எதிரியாக பாஜகவை கூறி வரும் நிலையில், பாஜக அந்தக் கட்சிக்கு ஆதரவு அளித்தது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்லாமல் உடனடியாக பாஜக தரப்பில் தங்களின் எம்பிக்கள் குழுவையும் கரூருக்கு அனுப்பி விசாரணை செய்தது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் கரூர் வந்திருந்தார். இதனிடையே தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா டெல்லி சென்றார். அங்கு பாஜகவின் சில முக்கியத் தலைவர்களை சந்திப்பதாக கூறப்பட்டது.
இதனால் கரூர் விவகாரம் மூலமாக தவெக தலைவர் விஜய்யை நெருங்க முடியும் என்று பாஜக கணக்கிட்டிருந்தது. ஆனால் பாஜகவிடம் பேசுவதற்கு விஜய் விரும்பவில்லை என்று தெரிகிறது. பாஜகவுடன் நெருக்கம் காட்டினால், அது தேர்தலில் பிரதிபலிக்கும் என்று விஜய் கருதி இருக்கிறார். இதனால் தொடக்க நிலையிலேயே விஜய் பாஜகவிடம் உதவியை நாடுவதை தடுத்திருக்கிறார்.
இதனை அண்ணாமலையின் பேட்டி மூலமாக அறிய முடிந்ததாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் கரூர் சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே விஜய்க்கு, தவெகவுக்கும் ஆதரவாக எக்ஸ் தளத்தில் அண்ணாமலை பதிவிட்டிருந்தார். இதன்பின் பாஜகவினர் அனைவரும் ஒரே குரலில் விஜய் மீது தவறு இல்லை.. திமுக மீதுதான் தவறு என்று கூறி வந்தனர்.
இதற்கு பின் திமுகவுக்கு நெருக்கடி ஏற்படும் என்று பாஜக கணக்கிட்டிருந்தது. ஆனால் திமுகவின் ஒவ்வொரு நாள் நடவடிக்கையும் பாஜகவுக்கு பின்னடைவை கொடுத்தது. அதேபோல் 2 நாட்களுக்கு முன்பாக அண்ணாமலை, நாங்கள் என்ன தவெகவின் மார்க்கெட்டிங் அதிகாரிகளா என்று கேள்வி எழுப்பி கொந்தளித்தார். இதன் மூலமாக பாஜகவின் பிடிக்கு விஜய் கட்டுப்படவில்லை என்று தெரிகிறது.
இதனால் தவெகவை கூட்டணிக்குள் கொண்டு வரும் திட்டத்தை பாஜக கைவிட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் டிசம்பர் மாதம் இறுதி வரை பாஜக தரப்பில் சில முயற்சிகளை செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ளதால், பாஜக அடுத்தக்கட்ட தேர்தல் பணிகளில் ஆர்வத்தை திருப்பி இருப்பதாக சில தரப்பினர் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications