விஜய்யை பதற்றத்திலயே வச்சிருக்காங்களே.. ஒருவேளை கூட ஒழுங்காக சாப்பிட விடாமல் நடந்த பரபர திருப்பங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் 'தளபதி'யாக வலம் வந்து, தேர்தல் களத்தில் 108 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்திருக்கும் விஜய், இன்று நிம்மதியாக ஒரு வேளை உணவைக் கூட உட்கொள்ள முடியாத அளவுக்கு அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ளார். வெற்றிக் களிப்பில் இருந்த தவெக முகாமை, ஆளுநரின் '118' என்ற மேஜிக் எண் இன்று பீதியில் ஆழ்த்தியுள்ளது. இன்று மே 7, 2026 - தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பதற்றமான அத்தியாயம் எழுதப்பட்டு வருகிறது.

இன்று மதியம் கிண்டி ஆளுநர் மாளிகைக்கு காரில் மிகுந்த நம்பிக்கையுடன் சென்றார் விஜய். ஆனால், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் காட்டிய 'செக்' விஜய்யை நிலைகுலையச் செய்துள்ளது. "சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பது ஒருபுறம் இருக்கட்டும்; அதற்கு முன்னால் என்னிடம் 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தைக் காட்டுங்கள், பிறகு முதல்வர் பதவி குறித்துப் பேசலாம்" என்று ஆளுநர் போட்ட பிடிவாதம், தவெக-வின் முதல்வர் கனவுக்கு இரும்புத் திரை போட்டது போல அமைந்தது. தவெக-வின் 108 இடங்களோடு, காங்கிரஸின் 5 இடங்களைச் சேர்த்து 113 பேர் மட்டுமே கையில் இருக்கும் நிலையில், மீதமுள்ள அந்த 5 பேருக்காக விஜய் இன்று பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

Vijay

ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியே வந்த விஜய்யின் முகத்தில் இருந்த அந்த இறுக்கம், பனையூர் அலுவலகத்தில் இருந்த தொண்டர்களைப் பதற்றமடையச் செய்தது. ஒருபுறம் ஆளுநரின் கெடுபிடி என்றால், மறுபுறம் கூட்டணிக் கட்சிகளின் 'பூனைக்கும் புலிக்கும் இடைப்பட்ட' ஆட்டம் விஜய்யை மேலும் அழுத்தத்தில் தள்ளியுள்ளது.

திருமாவளவன் இழுபறி

திருமாவளவன் வாய்மொழியாக ஆதரவு கொடுத்தாலும், "ஆளுநர் முதலில் அழைக்கட்டும், பிறகு கடிதம் தருகிறேன்" எனப் பிடிகொடுக்காமல் பேசுவது தவெக முகாமைத் தவிக்க விட்டுள்ளது. இடதுசாரி கட்சிகளோ, "கொள்கை ரீதியான முடிவு எடுக்க நேரம் தேவை" என இழுத்தடிப்பது விஜய்யின் ரத்த அழுத்தத்தை எகிறச் செய்துள்ளது.

அதிமுக கதவு

இவை அனைத்திற்கும் மேலாக, இன்று மாலை அதிமுக தரப்பிலிருந்து வந்த அந்த ஒற்றை அறிவிப்பு விஜய்யின் அத்தனை கணக்குகளையும் தவிடு பொடியாக்கியது. "தவெக-விற்கு ஆதரவு என்ற பேச்சுக்கே இடமில்லை" என அதிமுக கறாராகக் கதவை மூடியது, விஜய்க்கு விழுந்த பேரிடியாகக் கருதப்படுகிறது.

இதனால் வேறு வழியின்றி, இன்று இரவு பனையூர் அலுவலகத்தில் மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் விஜய் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். "ஆளுநரின் பிடிவாதத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டுவதா அல்லது மீதமுள்ள 5 இடங்களுக்கு சுயேச்சைகள் மற்றும் சிறிய கட்சிகளின் காலில் விழுவதா?" என்ற தர்மசங்கடமான நிலையில் விஜய் இன்று தள்ளப்பட்டுள்ளார்.

இதைவிட கொடுமை என்னன்னா.. நேற்று இரவு போலவே, இன்று இரவும், திமுகவும் அதிமுகவும் கூட்டணி வைக்கப்போகிறதாம் என்று ஒரு தகவல் பரவி வருகிறது. தவெகவின் அருண் ராஜே இதை சொல்லியுள்ளார். இதை நினைத்து நினைத்து இன்று இரவும் விஜய் சாப்பிட்டாரோ இல்லையோ தெரியவில்லை என கவலையில் உள்ளனர், ரசிகர்கள்.

போர்க்களம்

தேர்தல் முடிவுகள் வந்தபோது நிலவிய அந்த உற்சாகம் மறைந்து, இன்று பனையூர் அலுவலகமே ஒரு போர்க்களம் போல காட்சியளிக்கிறது. வெற்றி கிடைத்தும் அரியணையில் ஏற முடியாமல், ஆளுநரின் 'மேஜிக் நம்பர்' கெடுபிடியால் ஒரு நடிகராகப் பார்த்த பல சவால்களை விட, ஒரு அரசியல்வாதியாக இன்று விஜய் மிகப்பெரிய அக்னிப் பரீட்சையை எதிர்கொண்டு வருகிறார். இன்றைய இரவு விஜய்க்கு மட்டுமல்ல, தமிழக அரசியலுக்கே ஒரு நீண்ட இரவாக அமையப் போகிறது என்பதில் சந்தேகமில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+