ஆபாச பேச்சாளர்களை வன்மம் ஊட்டி வளர்க்கும் திமுக! எகத்தாளம் பேசலாமா? ஸ்டாலினுக்கு தவெக பதிலடி
சென்னை: ஆபாச பேச்சாளர்களை வன்மம் ஊட்டி வளர்க்கும் திமுக, எதிர்க்கட்சி ஜனநாயகம் என எகத்தாளம் பேசலாமா என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தவெக ஐடி விங் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து தவெக ஐடி விங் தனது கண்டன பதிவில் கூறியிருப்பதாவது: அரசியலை வியாபாரமாகவே செய்துவரும் Vending machine தி.மு.க. இப்போது தன் கட்சியின் ஆபாசப் பேச்சாளர்களை வன்மம் ஊட்டி வளர்த்து வருகிறது. கேட்டால், அதுதான் எதிர்க்கட்சி ஜனநாயகம் என்று எகத்தாளம் பேசுகிறது. மேல்மட்டத் தலைமை முதல் கீழ்மட்ட நிர்வாகம் வரை தரைமட்டத்திற்கும் கீழே சென்று அநாகரிக அரசியல் புரிந்து வருவதை நம் தமிழக மக்களும் தினம் தினம் பார்த்தே வருகின்றனர்.

ஆனால், வழக்கம்போல மக்களை மறந்து தான் என்ற திமிரில் தி.மு.க. வழக்கம்போல அராஜகம் செய்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு, ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றி தி.மு.க. செயல்பட்டதால்தான் now they are enjoying the consequences.
இருந்தும், அதிகார மமதை இன்னும் தலையை விட்டு இறங்காமல்,
இப்போதும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று காவல்துறையையே பகிரங்கமாக மிரட்டி அறிக்கை விடுகிறார் ஸ்டாலின் சார்.
சத்திய ஆட்சி எது?. சாத்தானின் ஆட்சி எது என்று மக்களுக்கே தெரியும் என்பது ஸ்டாலின் சாருக்கே தெரியும். அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல் கண்ணை மூடிக் கொண்டு வழக்கு போட்டதால், ஒழுங்காகப் படித்துவிட்டு வாருங்கள் என்று சுப்ரீம் கோர்ட் ஓங்கி அடித்ததை மறந்துவிட்டு ஊருக்கு உபதேசம் செய்யத் தொடங்கிவிட்டனர் தீயசக்தி தி.மு.க.வினர்.
நீதிநெறி மறந்து அரசியல் Vending machine ஆன தி.மு.க. விதைத்து வருகிற வினைகளை விரைவில் மேன்மேலும் அறுவடை செய்யத்தான் போகிறது. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், கடந்த இரு தினங்களுக்கு முன்பு திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய போது சட்டசபையை விஜய் கூட்டட்டும் எலும்பை உடைத்து விடுவோம் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருந்தார். மேலும் முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசியிருந்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம் காலை அவர் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு முன்னாள் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வந்தனர்.
மேலும் மார்க்கண்டேயனின் வழக்கறிஞரை கூட உள்ளே அனுப்பவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில் மார்க்கண்டேயன் கைதுக்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். அது போல் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு.
"அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?
கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?
மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?
ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences (பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்). இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதற்கு தவெக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications