களத்தில் இறங்கும் விஜய்.. திருச்சியில் முதல் மக்கள் சந்திப்பு.. பிரசாரம் தொடங்கும் ஸ்பாட் இது தான்?
திருச்சி: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் 13 ஆம் தேதி திருச்சியில் முதல் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை தொடங்க உள்ளார். விஜயின் இந்த பிரசாரத்திற்கு அனுமதி கோரி தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் கடிதம் அளித்துள்ளதாகவும், ஆனால் அங்கு பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தவெக தலைவர் விஜய் கடந்த மாதம் 21 ஆம் தேதி மதுரையில் பிரமாண்ட மாநாட்டை நடத்தினார். இந்த மாநாடு முடிந்த கையோடு, அடுத்ததாக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தார். சுற்றுப்பயண விவரங்கள் மற்றும் அதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை தயார் செய்யும் பணியில் தவெகவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

சொகுசு வசதிகளுடன் பிரசார பேருந்து
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி ஆரம்பித்தது முதல் 2026 சட்டசபை தேர்தல் தான் இலக்கு என்று கூறி அதற்கு படிப்படியாக தயார் செய்து வந்தார். கட்சி நிர்வாகிகள் நியமனம், கட்சிப் பாடல், கட்சி கொடி என அனைத்தையும் படிப்படியாக செய்தார். முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தி முடித்தார். அப்போது கொள்கைகளை அறிவித்தார். தொடர்ந்து இரண்டாவது மாநாட்டினை மதுரையில் நடத்தினார்.
தங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்றும், கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்றும் அறிவித்து இருந்தார். தொடர்ந்து சுற்றுப்பயணத்தை தொடங்க விஜய் திட்டமிட்டார். அதன்படி, விஜய்யின் பிரசாரத்திற்காக பனையூர் அலுவலகத்தில் சொகுசு வசதிகளுடன் கூடிய பேருந்து ஒன்றும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வரும் 13 ஆம் தேதி திருச்சியில் இருந்து விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி காவல் ஆணையரிடம் கடிதம்
இந்த நிலையில்தான், தவெக தலைவர் விஜய் தனது மக்கள் சந்திப்பு பிரசார பயணத்தை வரும் 13 ஆம் தேதி திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து துவங்க திட்டமிட்டுள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே விஜய் பிரசாரத்திற்கு அனுமதி கோரி தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் கடிதம் அளித்துள்ளதாக தகவல் வெளியானது.
பொது செயலாளர் ஆனந்த் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்திருந்த நிலையில், அங்கு விஜய் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது வரும் 13 ஆம் தேதி அரசியல் பிரசாரத்தை தொடங்கும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் இடத்தில் பேச காவல்துறை அனுமதி மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மக்கள் அதிகம் கூடும் இடம் என்பதாலும், பேருந்து நிலையம் அருகில் இருப்பதாலும் இங்கு விஜய் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
வேறு இடம் தேர்வு
முதல் கட்டமாக திருச்சி, அரியலூர், குன்னம், பெரம்பலூர் தொகுதிகளில் பிரசாரத்திற்கு விஜய் திட்டமிட்டு இருந்த நிலையில், சுற்றுப்பயணத்தின் தொடக்க உரைக்காக திருச்சியில் தவெக கோரிய இடங்களில் காவல்துறை அனுமதி அளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வேறு ஒரு இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தில் பேச அனுமதி கோரி மீண்டும் தவெக சார்பில் கடிதம் அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications