42 நாட்கள் மக்களை சந்திக்கும் விஜய்.. பிரச்சார வேன் ரெடி.. திருச்சியில் இருந்து தொடங்கும் ஜனநாயகன்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் 42 நாட்கள் தொடர் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஜூலை 2வது வாரம் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் விஜய் இந்த பயணத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி அல்லது மதுரையில் இருந்து தொடங்கும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.
10 மாதங்கள்
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் புதிதாக களம் காணவுள்ள நடிகர் விஜய்-ன் தமிழக வெற்றிக் கழகமும் மும்முரமாக பணிகளை மேற்கொண்டு வருகிறது. சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும், கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளில் விஜய் கவனம் செலுத்தி வருகிறார்.

பூத் கமிட்டி மாநாடு
ஏற்கனவே தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பை விஜய் முழுமையாக முடித்து கொடுத்துள்ளார். இதனால் இனி முழு நேரம் அரசியலில் தீவிரம் காட்ட தயாராகி வருகிறார். முதல் படியாக கோவையில் பூத் கமிட்டி மாநாடு நடத்தப்பட்டதை போல் அடுத்ததாக மதுரை, தர்மபுரி, திருச்சி, வேலூர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் பூத் கமிட்டி மாநாடு நடத்த முடிவு எடுத்துள்ளார்.
மக்கள் சந்திப்பு பயணம்
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் விஜயின் முதன்மை திட்டமாக மக்கள் சந்திப்பு பயணம் அமையவுள்ளது. அதாவது 42 நாட்கள் தமிழ்நாடு முழுவதும் விஜய் மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கான பணிகளை தவெக மாவட்டச் செயலாளர்கள் மேற்கொள்ளவும் தலைமை அறிவுறுத்தி இருக்கிறது.
42 நாட்கள்
ஜூலை 2வது வாரம் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்த மக்கள் சந்திப்பு பயணத்தை விஜய் தொடங்கலாம் என்று பார்க்கப்படுகிறது. திருச்சி அல்லது மதுரை ஆகிய நகரங்களில் இருந்து விஜயின் பயணம் தொடங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இதற்கான பிரத்யேக பிரச்சார வாகனமும் தயார் செய்யப்பட்டுள்ளது.
களத்திற்கு வரும் விஜய்
ஏற்கனவே இதற்காக மாவட்டச் செயலாளர்களிடம் வழித்தடம் தொடர்பான அறிக்கைகள் கோரப்பட்டிருக்கிறது. ஏற்கனவே விஜய்-க்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்து வரும் சூழலில், மக்கள் சந்திப்பு பயணம் மூலமாக தவெக பெண்கள் மற்றும் சீனியர்களின் ஆதரவை பெறவும் வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.
கோஷ்டி பூசல்
ஒவ்வொரு மாவட்டத்திலும் விஜய் என்ன பேச வேண்டும் என்பதற்கும் தனியாக ஒரு குழு உரைகளை வடிவமைத்து வருவதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கட்சி நிர்வாகிகளிடையே கோஷ்டி பூசல் இருக்கக் கூடாது என்று விஜய் கடுமையான உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளார். இதனால் விஜய் மக்கள் சந்திப்பு பயணத்தை கட்சி நிர்வாகிகள் இணைந்து மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications