TVK Vijay: விஜய் எந்த நேரத்தில் கட்சி ஆரம்பித்தாரோ! இத்தனை முட்டுக்கட்டைகளா? தவெகவினர் வேதனை!
சென்னை: தவெக தலைவர் விஜய் அரசியலுக்கு இத்தனை முட்டுக்கட்டைகளா என கட்சி நிர்வாகிகள் கவலையடைந்துள்ளனர். ஜான் ஏறினால் முழம் சறுக்குதே என்பதை போல் எந்த காரியமும் சரியாக நடக்கவில்லை என அவர்கள் புலம்பி வருகிறார்களாம்.
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் கடந்த 2024ஆம் ஆண்டு தொடங்கினார். அவர் கட்சியை அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினாலும் 2024 இல் நடந்த லோக்சபா தேர்தலிலும் ஈரோடு கிழக்கு, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களிலும் அக்கட்சி போட்டியிடவில்லை.

தங்களது இலக்கு 2026 தமிழக சட்டசபை தேர்தல்தான் என விஜய் தெளிவுப்படுத்திவிட்டார். இதனால் அக்கட்சியினர் சட்டசபைத் தேர்தலை முன்வைத்து தங்கள் பணிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை விஜய் தொடங்கினார்.
கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி, திருச்சியில் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை விஜய் தொடங்கினார். அப்போதே அவர் பிரச்சாரத்திற்கு தாமதமாக வந்தார். அவரை பார்க்க ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என காத்திருந்து சோர்வடைந்தனர்.
சிலருக்கு மயக்கமும் வந்துவிட்டது. இதைத் தொடர்ந்து நாகை, திருவாரூரில் நடந்த பொதுக் கூட்டத்திற்கும் விஜய் தாமதமாகவே வந்திருந்தார். அப்போது வெயிலின் தாக்கத்தால் மக்கள் மயங்கி விழுந்தனர்.
இதைத் தொடர்ந்து கடந்த 27ஆம் தேதி கரூர், நாமக்கல்லில் தேர்தல் பிரச்சாரத்தை விஜய் அறிவித்திருந்தார். அதில் நாமக்கல்லில் தேர்தல் பிரச்சாரத்திற்கு காலை 8.45 மணிக்கு வருவதாக கூறியிருந்தார். ஆனால் சென்னை வீட்டிலிருந்தே அவர் 8.45 மணிக்குத்தான் புறப்பட்டார்.
இதனால் அங்கும் விஜய் தாமதமாகவே வந்தார். திருச்சி விமான நிலையத்திலேயே அவரை பார்க்க ஏராளமான கூட்டம் கூடியது. அந்த கூட்டம் சிதைந்து போகாமல் அவர்களும் விஜய்யுடன் நாமக்கல் வரை வந்தனர். இதனால் வழியெங்கும் கூட்ட நெரிசலால் உள்ளூர் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரத்தில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அப்போது தவெகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் விஜய் பகல் 12 மணிக்கு கரூர் வருகிறார் என குறிப்பிட்டதால் விஜய்யை பார்க்க காலை 9 மணிக்கே ஏராளமானோர் குவிந்தனர்.
ஆனால் அவரோ இரவு 7.10 மணிக்குத்தான் கரூர் வந்திருந்தார். கிட்டதட்ட 8 மணி நேரத்திற்கும் மேலாக அந்த மக்கள் தண்ணீர் குடிக்கவோ, உணவு உண்ணவோ இயற்கை உபாதையை கழிக்கவோ வெளியே செல்லவில்லை.
விஜய்யின் வாகனம் அந்த கூட்டத்திற்குள் வந்த போது அதற்கு வழிவிட கூட்டம் முண்டியடித்த போது கீழே விழுந்தும் மூச்சுத்திணறியும் 41 பேர் பலியாகிவிட்டனர். அன்று கரூரை விட்டு சென்னைக்கு அன்றிரவு வந்தவர்தான், அதன் பிறகு விஜய் எங்கும் செல்லவில்லை. அடுத்தகட்ட தேர்தல் பிரச்சாரத்திற்கும் போகவில்லை.
கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியானதில் தமிழக அரசு தீவிரம் காட்டியது. உடனடியாக ஒரு நபர் கமிஷனை அமைத்தது. அந்த கமிஷனும் அடுத்த நாள் முதல் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து விளக்கம் கேட்டது.
இதனிடையே கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை கூட பார்க்காமல் விஜய் சென்னைக்கு ஓடி வந்துவிட்டார் என்ற விமர்சனமும் எழுந்தது. இதையடுத்து கரூர் செல்ல மாவட்ட காவல் துறையிடம் தவெக அனுமதி கேட்டது. இந்த நிலையில் விஜய்க்கு எதிராக சிறப்பு புலனாய்வு குழுவை உயர்நீதிமன்றம் அமைத்ததை எதிர்த்து தவெகவினர் உச்சநீதிமன்றம் சென்றனர்.
அங்கு விஜய்க்கு சாதகமான தீர்ப்பு வந்தது. அதாவது உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவை கலைத்துவிட்டு சிபிஐ விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் விஜய் நிம்மதிபெருமூச்சுவிட்டார்.
இதையடுத்து கரூர் செல்லும் முயற்சியை மீண்டும் எடுத்தார். கரூரில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ 20 லட்சம் நிவாரணத்தை விஜய் நேரில் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆன்லைன் மூலம் பணத்தை போட்டுவிட்டார்.
16 நாட்கள் காரியம், தீபாவளி விடுமுறை என சம்பவம் நடந்து 25 நாட்கள் ஆன நிலையில் தற்போது மீண்டும் வடகிழக்கு பருவமழை வேறு தொடங்கிவிட்டது. இதனால் விஜய்யால் கரூர் செல்வதிலும் சிக்கல் இருக்கிறது. அடுத்த கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுப்பதிலும் பிரச்சினை உள்ளது. இவ்வாறு விஜய் முன்னெடுக்கும் விஷயங்களில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் கட்சி நிர்வாகிகள் கடும் மனவேதனையில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications