ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தை முழுமையாக இடித்து தள்ள வேண்டும்! வரிந்து கட்டி களமிறங்கும் வேல்முருகன்!
சென்னை: "ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தை முழுமையாக இடித்து தள்ள வேண்டும் என போர்க்குரல் உயர்த்தியுள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்".
"ஆன்மிகத்திற்கும் - சுற்றுச்சூழலுக்கும் ஜக்கி வாசுதேவ் கேடு விளைவித்து வருவதாக அவர் கடுமையாக சாடியுள்ளார்".
"ஈஷா யோகா மையம், ஜக்கி வாசுதேவ் மீது எழுந்துள்ள புகார்கள் குறித்து, தமிழ்நாடு அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்".
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

வெள்ளியங்கிரி அடிவாரம்
"கோவையில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் செயல்பட்டு வரும் கர்நாடகத்தைச் சேர்ந்த ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளை, தமிழர் ஆன்மிகத்திற்கு எதிராகவும், சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆதியோகி சிலையும், அதையொட்டி நிறுவப்பட்ட பல்வேறு கட்டடங்களும் சட்டத்திற்குப் புறம்பான கட்டுமானங்கள் என்பதை, கடந்த 2017ல் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசின் தலைமைத் தணிக்கை அதிகாரி உறுதி செய்துள்ளார்".

ஈஷா யோகா மையம்
"சுற்றுச்சூழலுக்கு எதிரான நடவடிக்கை ஒருபுறம் இருக்க, மறுபுறம், ஈஷா யோகா மையத்தில் மர்ம மரணங்கள் தொடர்ந்து நடக்கிறது. தற்போது, திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியைச் சேர்ந்த பழனிக்குமார் மனைவி சுபஸ்ரீ மரணச் செய்தி வெளியாகியுள்ளது. கடந்த டிசம்பர் 11ஆம் தேதி, ஈஷாவுக்கு யோகா பயிற்சிக்கு சென்ற சுபஸ்ரீ, மர்மமான முறையில் மரணமடைந்ததுள்ளார். அவரது மரணம் பெரும் வேதனை ஏற்படுத்தும் அதே நேரத்தில், சுபஸ்ரீயின் மரண தொடர்பான விவகாரத்தில், ஈஷா மீது பல்வேறு சந்தேகங்களையும் எழுப்புகிறது".

மர்ம மரணங்கள்
"அதாவது, ஈஷா யோகா மையத்தில் பல்வேறு மர்ம மரணங்கள் அரங்கேறியுள்ள நிலையில், சுபஸ்ரீயின் மரணத்துக்கு ஜக்கி வாசுதேவும், ஈஷா அறக்கட்டளையும் தான் காரணமாக இருக்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி சந்தேகிக்கிறது. வனப்பகுதிக்கு மிக அருகிலேயே கட்டடங்கள் எழுப்பியது, நிதி மோசடியில் ஈடுபட்டது, பழங்குடியினரின் நிலத்தை ஆக்கிரமித்தது, ஈஷாவில் தொடரும் மர்ம மரணங்கள், காணாமல் போனவர்கள், நன்கொடை என்ற பெயரில் மோசடி, உரிய விசா பெறாமல், பல வெளிநாட்டு நபர்களும், ஈஷா மையத்துக்குள் தங்கி வருதல், இப்படியான ஏராளமான புகார்கள் ஜக்கி வாசுதேவ் மீது உள்ளது".

விசாரணை நடத்துக
"எனவே, ஈஷா யோகா மையம், ஜக்கி வாசுதேவ் மீது எழுந்துள்ள புகார்கள் குறித்து, தமிழ்நாடு அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும். இதற்காக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரிபரந்தாமன், சந்துரு தலைமையிலான குழுவை அமைத்து, விசாரணை நடத்த வேண்டும்".

இடித்து அப்புறப்படுத்துக
"தமிழர் ஆன்மிகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவித்து வரும் ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தை முழுமையாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும். யானை வழித்தடங்களை மறித்து கட்டப்பட்ட சட்டவிரோதமாகக் கட்டங்கள், மின் வேலிகள், சுவர்களை அகற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது".












Click it and Unblock the Notifications