விவசாயிகளுக்கு அரணாக நிற்பேன்; வேல்முருகன் அளிக்கும் தமிழ் புத்தாண்டு உறுதிமொழி!
சென்னை: விவசாயிகளுக்கு அரணாக நின்று அவர்களின் நலமும் வளமும் காப்பேன் என்ற உறுதிமொழியை தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியிருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்.
பொங்கல் விழாவை தமிழர் திருநாளாகக் கடைபிடிக்க முடிவெடுத்ததன் பின்னணி குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன் விவரம் பின்வருமாறு;
தமிழினத்தின் மதச்சார்பற்ற பெருவிழா பொங்கல்! சாதி- மத அடையாளங்கள் அற்ற மக்கள் விழா!
தமிழறிஞர்கள்
தமிழ்நாட்டில் தமிழறிஞர்கள் தமிழரின் வீரத்தை - அறத்தை - முற்போக்குக் கருத்துகளை விதைத்தவர்களாக இருந்திருக்கிறார்கள். தமிழர் திருநாள் என்று பொங்கல் திருவிழாவுக்குப் பெயர் சூட்டுவதற்கு முயற்சி எடுத்தவர்கள் அவர்களே. 1921 ஆம் ஆண்டு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில், தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் தலைமையில் ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழறிஞர் பெருமக்கள் ஒன்று கூடி, தமிழர் ஆண்டு முறையை உருவாக்கினார்கள்.
1970-ம் ஆண்டு
யாருடைய பெயரால் உருவாக்குவது என ஆராய்ந்து, திருவள்ளுவப் பேராசான் பெயரால் உருவாக்கினார்கள். இந்தத் திருவள்ளுவர் தொடர் ஆண்டுக் கணக்கை 1970-களில், முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டது. அதே போன்று, 1937ஆம் ஆண்டு, திருச்சியில் நடைபெற்ற அனைத்துத் தமிழர் மாநாட்டில், பொங்கல் விழாவை தமிழர் திருநாளாகக் கடைபிடிக்க முடிவெடுத்தார்கள்.
உழவர் பெருங்குடி
அதன்படி, சாதி, மத, இன வேறுபாடு எதுவுமின்றி, உழைப்பைத் தந்து உதவியவர்களையும் எண்ணி உழவர் பெருங்குடி மக்கள் நன்றி தெரிவித்து வணங்கி மகிழும் இனிய திருவிழாவாக, மனித நேயம் வளர்க்கும் தமிழ்ச் சமுதாயத்தின் தலைசிறந்த பண்பாட்டினை உலகுக்கு உணர்த்திடும் மகத்தான திருவிழாவாக தைப் பொங்கல் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
தமிழ் புத்தாண்டு
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டிலும், தமிழ் ஈழத்திலும், உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள், தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை மகிழ்வோடு இன்று கொண்டாடி வருகின்றனர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கிணங்க தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாகவும் இந்த தமிழ்ப் புத்தாண்டு அமைந்துள்ளது.
திமுக தலைமையிலான அரசில் பங்கு வகித்து வரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விவசாயப் பெருங்குடி மக்களின் நலமும் வளமும் கருதி, பல்வேறு சிறப்பு திட்டங்களை பெற வலியுறுத்தவதோடு, விவசாயிகளுக்கு அரணாக நிற்கும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.