அரிசி, பருப்புக்கும் ஜிஎஸ்டி வரி உயர்வு.. தமிழ்நாடு அரசு ஏற்கவே கூடாது.. வேல்முருகன் அதிரடி கோரிக்கை
சென்னை: அரிசி, பருப்பு, கோதுமை, தயிர் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களுக்கு, ஜி.எஸ்.டி வரியை அதிகரித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேதனை தெரிவித்துள்ளார்.
சாமானியர்களை பாதிக்கும் இந்த வரி உயர்வை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது என அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜிஎஸ்டி வரி விகித உயர்வை குறைக்க அடுத்ததாக மதுரையில் நடைபெறும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ள நிலையில் வேல்முருகன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு;

அரிசி -பருப்பு
கொரோனோ நெருக்கடி, வேலையின்மை, வருவாய் இழப்பு, உணவுப்பொருட்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சூழலில், அரிசி, பருப்பு, கோதுமை, தயிர் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களுக்கு, ஜி.எஸ்.டி வரியை அதிகரித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

47-வது ஜி.எஸ்.டி கவுன்சில்
ஜி.எஸ்.டி வரி தொடர்பான நடைமுறையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து, 47-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டிகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சாமானியர்கள் பயன்படுத்தும் கிரைண்டர், அரிசி ஆலை இயந்திரங்களுக்கான ஜி.எஸ்.டி வரி 5 விழுக்காட்டில் இருந்து 18 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.

18% ஆக உயர்வு
விவசாயிகள் பயன் பெறும், தண்ணீர் எடுக்கும் மோட்டார் பம்புகளுக்கு ஜி.எஸ்.டி வரி 12 விழுக்காட்டில் இருந்து 18 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, விதை, தானிய பருப்பு வகைகள், மாவு, பொரி அரிசி, தேன், உலர்ந்த காய்கறிகள், தயிர், மோர், பனீர் போன்றவற்றுக்கு 5 விழுக்காடு வரி விதிப்பு. எல்.இ.டி பல்பு, கத்தி, பேனா மை, பிளேடு போன்ற பொருள்கள் மீதான வரி 12 விழுக்காட்டில் இருந்து 18 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.

வேதனை
இவைத்தவிர, பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி கற்க பயன்படுத்தப்படும் வரைபடங்கள், உலக வரைபடங்கள், சுவர் வரைபடங்கள், உலக உருண்டைகள் உள்பட அனைத்து வகையான விளக்கப்படங்களுக்கும் 12 விழுக்காடு ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ஆன்லைன் ரம்மி, சூதாட்டம், லாட்டரி போன்றவற்றுக்கு 28 விழுக்காடு வரி விதிப்பது பல முறை விவாதிக்கப்பட்ட நிலையில் அதில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் ஒன்றிய அரசு ஒத்திவைத்திருப்பது வேதனை அளிக்கிறது.

ஏற்கக் கூடாது
எனவே, ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகள் ஒன்றிய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது என்றும் வரிவிதிப்பில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சம அதிகாரம் உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பதை கருத்தில் கொண்டு, சாமானியர்களை பாதிக்கும் இந்த வரி உயர்வை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது என தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்துகிறது.












Click it and Unblock the Notifications