அலுவலகத்தில் முத்துராமலிங்க தேவர் படத்தை வைத்து வணங்கிய தவெக தலைவர் விஜய்!
சென்னை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினத்தையொட்டி, இன்று தனது அலுவலகத்தில் அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி உள்ளார் தவெக தலைவர் விஜய்.
"தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்" என முழங்கியவர் முத்துராமலிங்க தேவர். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 3 நாட்கள் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நடைபெறுவது வழக்கம். இன்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

தேவர் குருபூஜையை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அவருடன் திமுகவின் மூத்த அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர். தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117ஆவது ஜெயந்தி கொண்டாடப்படும் சூழலில், தவெக தலைவர் விஜய் தனது அலுவலகத்தில், முத்துராமலிங்கத் தேவர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி உள்ளார். இது தொடர்பான வீடியோவை எக்ஸ் தளத்திலும் வெளியிட்டுள்ளார் விஜய்.
"இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அய்யா பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்." என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தேவர் ஜெயந்தியை ஒட்டி தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், "அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர். மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை வலுப்படுத்தத் துணை நின்றவர். பாராளுமன்ற, சட்டமன்ற அரசியலில் முத்திரை பதித்த பேச்சுக் கலைப் பேரரசர். சமூக நல்லிணக்கம் பேணியவர். தமிழக அரசியலின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகவும் மாறிய, மகத்தான மனிதரை அவரது குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு கடந்த 27 ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய விஜய், மதப்பிரிவினைவாதிகள் தமது சித்தாந்த எதிரி என்றும், திராவிட மாடல் என்று சொல்லி ஊழல் செய்யும் சுயநல குடும்பம் தனது அரசியல் எதிரி என்றும் அறிவித்தார் விஜய். விஜய்யின் இந்தப் பேச்சு அரசியல் அரங்கில் விவாதமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications