சிவகங்கை இளைஞர் கஸ்டடி மரண விவகாரம்: அஜித் குமார் வீட்டுக்கு நேரில் சென்ற விஜய்!
சென்னை: போலீசாரின் காவல் விசாரணையில் கொல்லப்பட்ட மடப்புரம் இளைஞர் அஜித் குமாரின் வீட்டிற்கு தவெக தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை திருப்புவனம் இளைஞர் அஜித் குமாருக்கு நீதி கேட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் தேதி, இடம் மாற்றப்பட்டுள்ளது. நாளை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்த நிலையில் ஜூலை 6 ஆம் தேதி சென்னை சிவானந்தா சாலைக்கு மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அடுத்த மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி மதுரையை சேர்ந்த பெண் மருத்துவர் நிகிதா மற்றும் அவரது தாய் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். அப்போது தங்களது காரை பார்க்கிங்கில் நிறுத்துமாறு காவலாளி அஜித் குமாரிடம் சாவியை ஒப்படைத்து விட்டு கோவிலுக்கு சென்று உள்ளனர். ஆனால் காவலாளி அஜித் குமாருக்கு கார் ஓட்ட தெரியாது என்பதால் வேறு ஒருவரின் உதவியுடன் காரை பார்க்கிங் செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் நீண்ட நேரம் கழித்து சாவியை மருத்துவர் நிகிதாவிடம் வழங்கியுள்ளார். பிறகு காரில் சென்று பார்த்தபோது 10 சவரன் நகை காணாமல் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை எடுத்து திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு பணிபுரிந்த காவலாளி அஜித் குமார் மற்றும் அவரது தம்பி நவீனை அழைத்து சென்றனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையின்போது அஜித்குமார் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அஜித்குமாரின் குடும்பத்தினர், காவல்துறையினர் தாக்கியதில் தான் அவர் உயிரிழந்ததாக தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அஜித்குமாரின் உடல் ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் ரத்த கசிவுகள் கை, கால் ,முதுகெலும்பு, இடுப்பு பகுதி ,முட்டி உள்ளிட்ட பகுதிகளில் சிராய்ப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது மேலும் கழுத்து கை உள்ளிட்ட இடங்களில் காயங்கள் இருந்தது.
மேலும் தொண்டை பகுதியில் பலத்த காயம் இருந்ததன் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக அவர் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு உயிர் இழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், குற்றம் சாட்டப்பட்ட 5 காவலர்களை பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டு திருப்புவனம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த கஸ்டடி மரண சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரைகிளை தாமாக முன்வந்து விசாரணை செய்தது. அப்போது காவல்துறையினருக்கு அழுத்தம் கொடுத்தது யார்? குற்றவாளிகளை அடிக்க யார் உரிமை கொடுத்தது என்று சரமாரியாக கேள்வி எழுப்பியது. மேலும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த நிலையில் தமிழக அரசு இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. மேலும் உயிரிழந்த அஜித் குமாரின் தம்பி நவீன் குமாருக்கு அரசு பணி வழங்க உத்தரவிட்டது.
இந்த நிலையில் தமிழக அரசை கண்டித்தும் அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்கும் வகையிலும் தமிழகம் வெற்றிக் கழகம் சார்பில் ஜூலை 3 ஆம் தேதி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்திற்கு அனுமதி கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இந்த போராட்டத்தை வேறொரு தேதிக்கு மாற்றிக் கொள்ள காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சிவகங்கை திருப்புவனம் இளைஞர் அஜித் குமாருக்கு நீதி கேட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் தேதி, இடம் மாற்றப்பட்டுள்ளது. நாளை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்த நிலையில் ஜூலை 6 ஆம் தேதி சென்னை சிவானந்தா சாலைக்கு மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் உயிரிழந்த அஜித் குமார் குடும்பத்தினரை நேரில் சந்திக்க சிவகங்கை மாவட்டத்துக்கு விஜய் சென்றுள்ளார். அஜித் குமார் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications