தேதி மாற்றப்படும் தவெக மதுரை மாநாடு.. நாளை அறிவிக்கிறார் விஜய்.. ஏன் இந்த மாற்றம்? வெளியான தகவல்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாடு நடைபெறும் தேதி மாற்றப்பட உள்ளதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
27 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதால் மாநாடு தேதியை மாற்ற காவல்துறை அறிவுறுத்தி உள்ளதாகவும், அதன்படி, மாநாட்டுக்கான புதிய தேதியை தவெக தலைவர் விஜய் நாளை அறிவிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தேர்தல் களத்தைச் சந்திக்கத் தீவிரமாகத் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மதுரையில் தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது.
மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை, பாரபத்தி பகுதியில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான தேதியை தவெக தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். ஆகஸ்ட் 25ஆம் தேதி, மதுரையில் நடைபெற இருப்பதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். மாநாட்டுப் பணிகள் கடந்த ஜூன் 16 ஆம் தேதி காலை, கட்சிப் பொதுச் செயலாளர் என். ஆனந்த் தலைமையில் பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடப்பட்டுத் தொடங்கப்பட்டன.
மேலும் மாநாட்டிற்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி, தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த்தை சந்தித்து மனு அளித்தார். மாநாட்டிற்கு இன்னும் 25 நாட்களே உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
தற்போது, பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து மாநாடு நடைபெறும் இடம் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அமர்வதற்கும், வாகனங்கள் நிறுத்துவதற்கும் தனித்தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக தடுப்பு வேலி அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறும் தேதி மாற்றம் செய்யப்பட உள்ளதாக, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்த பின், அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தவெக மாநாடு நடைபெறும் தேதியைத் தொடர்ந்து, அடுத்த 2 நாட்களில் விநாயகர் சதுர்த்தி வருவதால், மாநாடு தேதியை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்பு எதுவும் உள்ளதா? என காவல்துறை தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து தவெக தரப்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தவெக-வின் 2-வது மாநில மாநாடு, வரும் 18 ஆம் தேதியிலிருந்து 22 ஆம் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளில் நடைபெறும் என கூறியுள்ள என். ஆனந்த், அந்த தேதி என்ன என்பதை, கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பார் எனவும் கூறியுள்ளார். ஏற்கனவே அறிவித்திருந்த தேதிக்கு முன்கூட்டியே மதுரை மாநாடு நடைபெற உள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications