தவெக ஆதரவு தேவையில்லை; விஜய் ஒரு குழந்தை! பாஜகதான் எதிரி: பொன்னையன் பொளேர்
சென்னை: வரும் காலத்தில் அதிமுகவுடன் தவெக கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுவரும் நிலையில், நடிகர் விஜய் இப்போதுதான் கட்சி ஆரம்பித்துத் தவழ ஆரம்பித்துள்ளார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
எம்.ஜிஆரின் மனைவியும் முன்னாள் முதலமைச்சருமான வி.என்.ஜானகியின் நூற்றாண்டு விழா கடந்த சில நாட்கள் முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய பழனிசாமி, 'அதிமுகவின் நலனைக் கருதி ஜானகி அம்மையார் கட்சி பொறுப்பை விட்டுக் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார்' என்று குறிப்பிட்டுப் பேசினார்.

அதேபோன்று 'கட்சியை முடக்க நினைப்பவர்கள் எண்ணம் நிறைவேறாது. மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம்' என்றும் பேசி இருந்தார். அவர் மறைமுகமாக சசிகலாவைத்தான் தாக்கி பேசினார் என்பதைப் பலரும் அறிவார்கள். கட்சியைவிட்டு நீக்கப்பட்ட ஓபிஎஸுக்கு மீண்டும் கட்சியில் இடம்தர வாய்ப்பு இல்லை என்பதையும் எடப்பாடி மறைமுகமாகச் சுட்டிக் காட்டி இருந்தார்.
இந்நிலையில் அதிமுக ஒருபோதும் விஜய் கட்சியை நம்பியில்லை என்றும் அந்தக் கட்சியின் கூட்டணிக்காக நாங்கள் காத்திருக்கவில்லை என்றும் அதிமுக முன்னாள் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். கட்சியில் மீண்டும் சசிகலா இணைக்கப்படுவதற்காக வாய்ப்பு உள்ளதா ? என்பது பற்றி விளக்கமளித்துள்ள
அவர்,"சசிகலாவைப் பொறுத்தவரை அவருக்கும் அதிமுகவுக்கும் தொடர்பு இல்லாதவர். இரட்டை இலை சின்னம் தமிழ்நாட்டை ஆளும் போதுகூட அவருக்கும் கட்சிக்கும் தொடர்பு இருந்தது இல்லை. ஜெயலலிதாவின் மரணத்திற்கே சசிகலாவும் அவரது குடும்பத்தினரும்தான் காரணம் என்று தொண்டர்கள் நினைக்கிறார்கள். பொது மக்களிடம் கூட அந்த மாதிரியான ஒரு நினைப்பு இருக்கிறது.
ஆகவே, அதிமுக சசிகலாவை ஒரு செல்லாக் காசு என்றுதான் கருதுகிறது. இரட்டை இலை என்பதுதான் எங்கள் அச்சாணி. அதே மனநிலையில் தான் கட்சித் தொண்டர்களும் உள்ளனர். கடந்த தேர்தலில் சசிகலாவுக்கும் ஓபிஎஸுக்கும் அணு அளவுக்கும் கூட செல்வாக்கு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. அப்படி இருக்கும் போது அவரை எப்படி தொண்டர்கள் ஏற்பார்கள்?
அதிமுகவை முடக்கலாம் எனச் சிலர் போடும் கணக்கு பலிக்காது. அதைத்தான் எடப்பாடியும் ஜானகி நூற்றாண்டு விழாவில் பேசி இருந்தார். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். 100க்கு 1000% உறுதியாக உள்ளோம். இன்று மட்டும் அல்ல. எப்போதும் ஒட்டும் இல்லை. உறவும் இல்லை என்பதுதான் அதிமுக நிலைப்பாடு. பாஜக தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் எதிரான இயக்கம். மதவெறி, மொழி வெறி பிடித்த இயக்கம் பாஜக.
தமிழ்நாடு வளர்ந்த மாநிலம் என்று கூறி உரிய நிதியை அளிக்க மறுக்கிறது பாஜக அரசு. சேல்ஸ் டாக்ஸ் ஒழிக்கப்பட்டு, ஜிஎஸ்டி வந்த பிறகு மாநிலத்தின் வரி வருவாய் குறைந்துவிட்டது. நிதிப் பற்றாக்குறை இருப்பதால், திட்டங்களைப் போட டெல்லியின் கையை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியுள்ளது. நிதியைக் கேட்டால், வளர்ந்த மாநிலம் என வழங்க வேண்டிய பணத்தைக் கூட தாமதித்து வழங்குகிறார்கள். இது ஒரு கொடுமையான நிலை. எனவே பாஜகவுடன் உறவு என்பதை அதிமுக எந்தக் காலத்திலும் வைக்காது.

பாஜக தமிழகத்தில் ஒரு செல்லாக் காசு. அது ஒரு உலகப் பணக்கார கட்சி. ஆகவே பணத்தை வைத்து தமிழ்நாட்டை வெல்லலாம் என கணக்குப் போடுகிறது. அந்தக் கட்சியை ஏழை, எளிய மக்கள் புறக்கணித்துவிட்டனர். எனவேதான் தமிழகத்தில் ஒன்று அல்லது 2 சீட்டுகளைக் கூடப் பெறமுடியவில்லை. பிஜேபி எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டில் வெல்லாது" என்று பேசியுள்ளார்.
அதிமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் இடையே கூட்டணி இல்லை என புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்திருந்தாலும், அதற்கான வாய்ப்பு வருங்காலத்தில் உள்ளது என்றே பலரும் கருத்து கூறி வருகின்றனர். அதைப் பற்றிப் பேசிய பொன்னையன், "விஜய் எங்களுடன் வரவேண்டும் என அதிமுக வற்புறுத்துகிறதா? விஜய் எங்களுடன் கூட்டணி வைத்தால்தான் நாங்கள் வெற்றி பெற முடியும் என்ற நிலை எங்களுக்கு இல்லை. அவர் பிறந்த குழந்தை. இப்போதுதான் விஜய் தவழ ஆரம்பித்திருக்கிறார். அவர்களின் நிலை என்ன என்பது போகப் போகத்தான் தெரியும். எந்தளவுக்கு முன்னேற்றம் இருக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். முதலில் விஜய் கட்சி வளரட்டும். பின் அதைப் பற்றிப் பேசுவோம்" என்கிறார்.












Click it and Unblock the Notifications