கவுன்சிலருக்கு 500, போலீசுக்கு 500 கப்பம்.. மொத்தமாக ஒழித்த தவெக.. ரவி மரியா
சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்துள்ளது. அதிமுக நிர்வாகிகள் பலரும் தவெகவில் இணைந்து வருகிறார்கள். லஞ்சம் ஊழலற்ற ஆட்சியை வழங்குவோம் என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். இந்நிலையில் வியாபாரிகள் கவுன்சிலர், போலீஸ் ஆகியோருக்கு மாத மாதம் கப்பம் கட்டிய நிலை மாறியுள்ளதாக ரவி மரியா கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகரும், தவெக நிர்வாகியுமான ரவி மரியா பேசுகையில், "தவெகவில் இணைந்துவிட்டீர்களே என பலரும் கேட்கிறார்கள். விஜய் சாரும் நானும் 30 வருட கால நண்பர். குஷி படத்தில் நான் அசோஸியேட் டைரக்டர் என்று கூறினேன். பிளாட்பாரத்தில் வியாபாரம் செய்வோர் கடந்த ஆட்சியில் கவுன்சிலருக்கு 500 ரூபாய், போலீசுக்கு 500 ரூபாய் தினமும் வீதம் மாதம் 30,000 ரூபாய் கப்பம் கட்டி கொண்டிருந்தேன். விஜய் சார் ஆட்சிக்கு வந்தவுடன் மாதம் 30,000 மிச்சமாகி கொண்டிருக்கிறது என்கிறார்கள்.

அற்புதமான ஆட்சி
இந்த ஆட்சி அவ்வளவு சிறப்பாக உள்ளது. காவல்துறையில் எங்கேயும் எந்த பிரச்சனை இல்லை. பர்மிஷனுக்கு கூட காசு கேட்பதில்லை, எந்த தொல்லையும் என்று அனைவரும் சொல்கிறார்கள். நடிகனாக நானும் அதற்கு ஒரு சாட்சி. ஒரு மூன்று படத்தில் பார்த்துவிட்டேன் எந்த தொந்தரவும் இல்லை. இப்படி ஒரு அற்புதமான ஆட்சியை மக்களுக்கு வழங்கி கொண்டிருக்கிறார் முதலமைச்சர். அவர் சினிமாவில் இருந்து சென்றுள்ளார் என்பதில் கூடுதல் பெருமை.
அமைச்சர் ராஜ்மோகன் நான் சிவப்பு மனிதன் படத்தில் நிகழ்ச்சி தொகுப்பு செய்திருந்தார். கொரோனாவுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி அது. இவர் நல்லா பேச்சாளராக இருக்கிறார். நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று நினைத்தேன். அவர் சினிமாவிலேயே முயற்சித்து வருவார் என நினைத்தேன். காலம் அவரை சரியான இடத்தில் சேர்த்து இன்று அமைச்சாரக்கியுள்ளது. காலத்திற்கும், இயற்கைக்கும் நன்றி.
விருதுகளை உடனுக்குடன்
7, 8 வருடங்களுக்கு ஒருமுறை தான் திரைத்துறைக்கு பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது. இதனால் சில நேரங்களில் விருது வாங்குவோர் இல்லாமல் போய்விடுகிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஜனவரி, பிப்ரவரி மாதத்திலேயே முந்தைய வருடத்துக்கான விருதை வழங்கினால் உதவியாக இருக்கும். இதற்காக ஒரு சிறப்பு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது கலைஞர்களுக்கு உடனடினயாக அங்கீகாரம் கிடைக்கும்.
தமிழ் திரையுலக இந்த காலகட்டத்தில் தப்பித்தால் தான் உண்டு. வேறு எந்த காலத்திலும் தப்பிக்க முடியாது. நம்முடன் நட்பாக இருந்தவர் முதலமைச்சராக உள்ளார். இந்த துறையை காப்பாற்றிவிட்டால், தமிழகத்தின் மற்ற துறைகளையும் காப்பாற்றிவிட முடியும். அனைத்து துறை பிரச்சனைகளையும் அரசு தீர்ப்பார்கள் என்று நம்பிக்கை உள்ளது. இந்த ஆட்சியில் தமிழகம் பெரிய வளர்ச்சியடையும்" என்றார்.












Click it and Unblock the Notifications