பெண்கள் ஓட்டுக்கு குறி.. மகளிருக்கான தேர்தல் வாக்குறுதியை நாளை வெளியிடும் விஜய்.. தவெக அறிவிப்பு
சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நாளை மகளிருக்கான பிரத்யேக தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட உள்ளது. நாளை தவெக சார்பில் மாமல்லபுரத்தில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாக உள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவ உள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர், விஜயின் தவெக இடையே தான் இந்த தேர்தலில் போட்டி நிலவ உள்ளது.
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் பெரிய கூட்டணியை அமைக்க முயன்றது. ஆனால் அது நடக்கவில்லை. இந்நிலையில் தான் கூட்டணி அமையாவிட்டாலும் கூட தனித்து களமிறங்க விஜய் முடிவு செய்துவிட்டார்.
இந்நிலையில் தான் தவெக சார்பில் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டுமின்றி அனைத்து வயது பெண்களின் ஓட்டுகளை பெறும் வகையில் தவெக திட்டமிட்டுள்ளது.

அதன்படி நாளை மாமல்லபுரத்தில் தவெக சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த வேளையில் விஜய் பெண்களை கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்க உள்ளார்.
ஒவ்வொரு தேர்தலின்போதும் தமிழகத்தில் தொகுதி வாரியாக பெண்களின் ஓட்டுகளை அதிகம் பெற ஒவ்வொரு கட்சிகளுக்கு இடையேயும் கடும் போட்டி உள்ளது. இதனால் தான் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்படும்.
தற்போது கூட பெண்களை கவரும் வகையில் மகளிர் உரிமைத்தொகையை ரூ.1000ல் இருந்து ரூ.2 ஆயிரமாக தருவதாக திமுக, அதிமுக அறிவித்துள்ளன. மேலும் இன்னும் பல அறிவிப்புகள் அவர்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற உள்ளது.
இப்படியான சூழலில் விஜயும் மகளிர் ஓட்டுகளை தன்வசப்படுத்தும் வகையில் கவர்ச்சியான அறிவிப்புகளை நாளை வெளியிட வாய்ப்புள்ளது. இதனால் நாளை தினம் விஜயின் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கழகத் தோழர்களுக்கு வணக்கம். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கழகத் தலைவர் (விஜய்) பங்கேற்கும் மகளிர் தின விழா, நாளை (07.03.2026) சனிக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது.
இந்த மகளிர் தின விழாவில், சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிருக்கான திட்டங்கள் குறித்துக் கழகத் தலைவர் அறிவிக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பவர்களுக்கு QR குறியீட்டுடன் கூடிய நுழைவு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இல்லை.
அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் வரும் 8ஆம் தேதியன்று, (08.03.2026) கழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் தின விழா கொண்டாடப்படும் என்பதையும் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்'' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications