செம்மொழிப்பூங்காவில் மலர் கண்காட்சி.. பூத்துக்குலுங்கும் பல லட்சம் மலர்கள்.. சென்னையில் ரசிக்கலாம்
சென்னை: சென்னை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். உதகை போல சென்னையில் பூத்துக்குலுங்கும் லட்சக்கணக்கான மலர்களை இன்று முதல் 10 நாட்களுக்கு பார்த்து ரசிக்கலாம்.
குளிர் பிரதேசங்களில் நடத்தப்படும் மலர் கண்காட்சியை சென்னையில் நடத்தினால் எப்படி இருக்கும் என்ற சென்னை மக்களின் ஏக்கத்தை போக்கும் வகையில் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை சார்பில் கடந்த ஆண்டு மலர் கண்காட்சி நடத்தப்பட்டது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இந்த ஆண்டும் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.

சென்னையில் 3வது முறையாக மலர் கண்காட்சி தோட்டக்கலை துறை சார்பில் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செம்மொழி பூங்காவில் இன்று முதல் மலர் கண்காட்சி தொடங்கியுள்ளது. பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை கவரும் வகையில் அன்னப்பறவை உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் இந்த பூங்காவை திறந்து வைத்தார். தமிழக அரசு ரூ.8 கோடி செலவில் சாலை ஓரத்தில் பெரிய பெரிய மரங்கள் சூழ்ந்துள்ள இடத்தில் செம்மொழிப் பூங்காவை அமைத்தது.
இங்கு 700 வகையான தாவரங்கள் உள்ளன. செம்மொழி பூங்காவில் அரிய வகை மரங்கள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. அதாவது, ஊட்டி தாவரவியல் பூங்காவைப் போல செம்மொழிப் பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி இன்று மலர்கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சியை, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த மலர் கண்காட்சிக்காக கிருஷ்ணகிரி, கொடைக்கானல், கன்னியாகுமரி, மதுரையில் இருந்து அரிய வகை மலர்கள் எடுத்துவரப்பட்டு கண்காட்சியில் பயன்படுத்தப்பட உள்ளது. 12 லட்சம் மலர்கள் இந்த கண்காட்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட பலரும் மலர் கண்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்றனர். 10 நாட்களுக்கு இந்த மலர் கண்காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மலர் கண்காட்சியை காண வரும் பெரியவர்களுக்கு கட்டணமாக ரூ.150 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறியவர்களுக்கு ரூ.75 கட்டணமும், வீடியோ, போட்டோ கேமரா கொண்டு செல்பவர்களுக்கு ரூ.500 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் பொழுது போக்கு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications