பட்டா.. சென்னை, தாம்பரம் பகுதி மக்களின் பல வருட கனவு நினைவாகப் போகுது.. உதயநிதி குட்நியூஸ்
சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் குடியிருப்போருக்கு அடுத்த மாதம் ஐந்தாயிரம் பட்டாக்கள் வழங்கப்பட உள்ளதாக சட்டசபையில் சிறப்பு திட்டங்கள் செயலாக்க திட்டம் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னையின் புறநகர் பகுதிகள் பல நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகள் என்பதால் அங்கு குடியிருக்கும் ஏழை மக்கள் பட்டா வாங்குவது சிக்கலாக உள்ளது. இதேபோல் சென்னையின் நிலத்தின் மதிப்பு கோடிகளை தாண்டி இருப்பதால் நிலம் வாங்க முடியாத நிலையில் தவிக்கிறார்கள். அதேநேரம் சிலர் அரசின் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு, வணிக ரீதியாக பயன்படுத்தியும் வருமானம் ஈட்டி வருவதும் நடக்கிறது.

சென்னையை பொறுத்தவரை நீர் நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்கள், அந்த பகுதிகளில் வீட்டு மனை வாங்கியவர்கள் அங்கு பட்டா எந்த காலத்திலும் வாங்க முடியாது என்கிற நிலை இருக்கிறது. அதேநேரம் அரசின் புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு அரசு அவ்வப்போது பட்டா வழங்கி வருகிறது. அதுவும் மிகவும் கவனமாக பரிசீலித்து பட்டா வழங்கி வருகிறது
அந்த வகையில், சென்னை அதன் புறநகர்ப் பகுதிகளில் குடியிருப்போருக்கு அடுத்த மாதம் ஐந்தாயிரம் பட்டாக்கள் வழங்கப்படும் என சட்டசபையில் சிறப்பு திட்டங்கள் செயலாக்க திட்டம் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், "சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் குடியிருப்போருக்கு பட்டா பெறுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் பெறப்பட்டன. எனவே, பட்டா வழங்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை போக்கிட வேண்டும் என்ற முனைப்போடு திராவிட முன்னேற்ற கழக அரசு செயல்பட்டு வருகிறது
இதற்காக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய ஓர் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் பரிந்துரைகள் நமது தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கப்பட்டு, பட்டா இல்லாத பொதுமக்களுக்கு பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அடுத்த மாதம் ஐந்தாயிரம் பட்டாக்கள் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வழங்க இருக்கின்றோம்" என்றார்.
முன்னதாக அரசு பதிவேடுகளில் 'நத்தம்' என வகைப்படுத்தப்பட்ட ஆட்சேபனையற்ற நிலங்களில் பல ஆண்டுகளாக வசிப்பவர்களுக்கு மட்டுமே அரசு மிகவும் கவனத்துடன் பட்டா தருகிறது.மேலும் மனை பட்டா தொடர்பான பிரச்னைகளை தீர்க்க அதிகாரிகளை நியமித்து விசாரணை நடத்துகிறது.
முன்னதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்ஹப, சிட்லபாக்கம் ஏரி, தாழம்பூர், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், அடையாறு ஆறு உள்ளிட்ட இடங்களில் வருவாய்த்துறை அதிகாரிகள், அரசு சொத்துகள் மற்றும் நீர்நிலைகளுக்கு தனி நபர்களுக்கு பட்டா வழங்குவதில் பல்வேறு முறைகேடுகளை நடந்ததை கண்டுபிடித்தனர். அதன்பிறகு விதிகளை கடுமையாக்கிய அரசு, முறைகேடாக பட்டா வழங்கிய அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தது. மேலும் பல்வேறு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கையும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications