'சென்னை விழா 2023'.. 10 நாடுகள் + 25 மாநிலங்களின் கைவினை பொருட்கள் ஒரே இடத்தில்.. செம பிரம்மாண்டம்
சென்னை: 10 நாடுகள், 25 மாநிலங்களை சேர்ந்த கைவினை கலைஞர்கள் பங்கேற்கும் 'சென்னை விழா 2023' இன்று மாலை சென்னை தீவு திடலில் தொடங்குகிறது. இந்த விழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் சென்னையில் ஏப்.29ம் தேதி முதல் மே 14ம் தேதி வரை சென்னை விழா நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ரூ.1.50 கோடி செலவில் பிரமாண்டமாக நடத்தப்படும் இந்த திருவிழாவில் 10 நாடுகள், 25 மாநிலங்களை சேர்ந்த கைவினை கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இந்த விழாவில் 20 பாரம்பரிய கலை விழாக்கள் நடைபெறுகின்றன. தீவுத்திடலில் நடைபெறும் இந்த விழாவில் 300 விற்பனையகங்கள் அமைக்கப்படுகின்றன. இதில் 25 அரங்குகளில் வித்தியாசமான உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இது குறித்து சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி கூறியதாவது, "சென்னை விழாவில் நடைபெறும் கண்காட்சியில் வங்கதேசம், பூடான், ஈரான், நேபாளம், நைஜீரியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, கிர்கிஸ்தான், உகாண்டா, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த கைவினை கலைஞர்கள் தங்கள் சொந்த நாட்டு கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்துவார்கள். அதேபோல தேசிய அளவில் ராஜஸ்தானின் மர வேலைப்பாடுகள் தொடங்கி பனாரஸ் பட்டு வரை என 20 மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் தங்களின் கைவினைப் பொருட்களை 80 அரங்குகளில் விற்பனைக்கு வைப்பார்கள்.
அதேபோல தமிழ்நாட்டை சேர்ந்த கைவினை கலைஞர்களும் தங்கள் கலை பொருட்களை 70 அரங்குகளில் காட்சிக்காக வைப்பார்கள். இதில் புவியியல் குறியீடு பெற்ற பொருட்கள் முன்னிலைப்படுத்தப்படும். அதேபோல சில பொருட்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பது குறித்தும் இதில் செய்து காட்டப்படும்" என்று கூறியுள்ளார். இந்த திருவிழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த திருவிழா கைவினை கலைஞர்களின் மறுவாழ்வு அளிக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதில் பற்கேற்க உள்ள பல்வேறு மாநிலங்களை சார்ந்த கலை பொருட்கள் குறித்த தகவல்களும் சில வெளியாகியுள்ளன. முதலாவது ஆந்திராவின் கலம்காரி. கலம்காரி என்பது பருத்தியில் நெய்யப்பட்ட ஜவுளி புடவையில் கைகளால் செய்யப்படும் வேலைப்பாடாகும். ஸ்ரீகாளஹஸ்தி பாணி மற்றும் மச்சிலிப்பட்டினம் பாணியில் இது உருவாக்கப்படுகிறது. இதில் வரையப்படும் ஓவியங்கள் முழுவதும் இயற்கை வண்ணங்களை கொண்டு உருவாக்கப்படுகின்றன.
அதேபோல பீகாரை சேர்ந்த மதுபானி ஓவியங்களும் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. இன்றைய பீகாரில் உள்ள மிதிலா பகுதியில் உள்ள மதுபானி மாவட்டத்தில் இந்த வகை ஓவியங்கள் வரையப்படுகின்றன. இங்குள்ள கலைஞர்கள் ஓவியங்களை வரைவதற்கான சாயத்தை செடி, கொடி, பூக்கள் போன்றவற்றிலிருந்து பெறுகின்றனர். நாட்டின் வேறு எந்த பகுதியிலும் இப்படியான ஓவியங்கள் வரையப்படுவதில்லை. எனவே இந்த ஓவியங்களுக்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு இருக்கிறது.
அதேபோல குஜராத்தின் சூரத் ஜரி மற்றும் கட்ச் எம்பிராய்டரி ஆகிய கலைப்பொருட்களும் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. இதில் சூரத் ஜரி என்பது பட்டு புடவைகளில் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களை இணைத்து டிசைன் செய்யப்படுவதாகும். அதேபோல கட்ச் எம்பிராய்டரி என்பது ஒரு தனித்துவமான கைத்தறி ஆடையாகும். இந்த பட்டியலில் இமாச்சலப் பிரதேசத்தின் 'குலு சால்வையும்' இடம்பிடித்துள்ளன. கோயில்கள் மற்றும் புத்த மடாலயங்களில் உள்ள ஓவியங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த சால்வைகளில் வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஓவியங்கள் அல்லாது வெறுமென வண்ணங்கள் பூசப்பட்ட இந்த சால்வைகள் மிகவும் பிரபலமானதாகும்.
இதே போல ஜம்மு காஷ்மீரின் பஷ்மினா சால்வைகள், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற சன்னப்பட்டின பொம்மைகள், மகாராஷ்டிராவை சேர்ந்த வார்லி பழங்குடி மக்களின் ஓவியம், ஒடிசாவின் பட்டாச்சித்ரா துணி ஓவியம், கேரளாவின் ஆறன்முளா கண்ணாடி, ராஜஸ்தானின் சங்கநேரி துணி ஆகியவை இதில் விற்பனைக்கும் பார்வைக்கும் வைக்கப்படுகிறது. இந்த விழாவுக்கு நுழைவு கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications