ஆளுநர் உரை..சட்டசபையில் தீர்மானம்.. மரபை காத்த முதல்வர் ஸ்டாலின்.. நன்றி சொன்ன உதயநிதி
சென்னை: தமிழ்நாடு அரசு தயாரித்து தானும் இசைவளித்த உரையை முறையாக வாசிக்காத ஆளுநரின் மரபு மீறலுக்கு எதிராக அரசு தயாரித்த உரை மட்டுமே அவைக் குறிப்பில் ஏற வேண்டுமென, முதலமைச்சர் அவர்கள் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது; சட்டமன்ற மரபைக் காத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

தமிழக சட்டசபை இன்று தொடங்கியது முதலே கூச்சல் குழப்பம் நிலவியது. ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்கும் போதே திமுக கூட்டணி கட்சியினர் தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்து கூச்சலிட்டனர். அந்த களேபரங்கள் எதையும் பொருட்படுத்தாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் உரையை வாசித்தார்.
மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் ஆளுநர் ரவியின் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு அளித்த உரையில் இருந்த சில பகுதிகளை விட்டு விட்டு வாசித்து முடித்தார். உடனே மீண்டும் பரபரப்பு பற்றிக்கொண்டது.

திராவிடம், தமிழ்நாடு, அமைதிப்பூங்கா தமிழ்நாடு என அரசு எழுதி கொடுத்த உரையில் இருந்தவைகளை வாசிக்காமல் ஆளுநர் புறக்கணித்து விட்டதாக திமுக கூட்டணி கட்சியினர் குற்றச்சாட்டை முன் வைத்தனர். ஆளுநர் வாசித்த உரையை அவை குறிப்பில் இருந்து நீக்கி விட்டு தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை மட்டுமே அவைக்குறிப்பில் எடுத்துக்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானத்தை முன்மொழிந்து கொண்டிருக்கும் போதே விறுவிறுவென்று சட்டசபையை விட்டு வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழக சட்டசபை வரலாற்றில் இதுவரைக்கும் நடக்காத சம்பவங்கள் இன்றைக்கு அரங்கேறின. ஆளுநர் ஆர்.என்.ரவி மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று பலரும் கருத்து கூறினர்.
இந்த நிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி கூறி பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு தயாரித்து தானும் இசைவளித்த உரையை முறையாக வாசிக்காத ஆளுநரின் மரபு மீறலுக்கு எதிராக அரசு தயாரித்த உரை மட்டுமே அவைக் குறிப்பில் ஏற வேண்டுமென, முதலமைச்சர் அவர்கள் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது; சட்டமன்ற மரபைக் காத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என்று ட்வீட் செய்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் .












Click it and Unblock the Notifications