ரூ.1000 உரிமைத் தொகை.. ஸ்டாலினின் அதிரடி ஆர்டர்! மீட்டிங்கில் நடந்தது என்ன? உதயநிதி சொன்ன குட்நியூஸ்
சென்னை: ரூ.1000 மகளிர் உரிமைத் தொகையில் தகுதியானவர்கள் யாரையும் தவற விடக்கூடாது என தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாளன்று தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் தமிழ்நாடு அரசு, இந்த உரிமைத் தொகையை பெறுவதற்கு தகுதி வாய்ந்த பெண்கள் யார்? தகுதியற்றவர்கள் யார்? என அறிவித்து விண்ணப்பிக்கும் முகாம்களை நடத்தியது.

2 கட்டங்களாக இந்த முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த வாரம் முதல் கட்ட முகாம்கள் நிறைவடைந்தன. இதில் 80 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டு இணையத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டன. இந்த நிலையில் கடந்த வாரம் சனிக்கிழமை 14,000க்கும் அதிகமான இடங்களில் 2 ஆம் கட்ட முகாம் தொடங்கின.
16 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த 2 ஆம் கட்ட முகாமில் இதுவரை 60 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. 2 ஆம் கட்ட முகாம்களில் விண்ணப்பிக்க தவறியவர்கள் 19.08.2023 மற்றும் 20.08.2023 ஆகிய நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்குமாறும் அரசு கேட்டுக்கொண்டு உள்ளது.

இந்த நிலையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக இன்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த பணிகளின் அடிப்படையில் பெறப்பட்டு இருக்கும் கருத்துக்களையும் அதன் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆலோசித்தார்.
இதில் தமிழ்நாடு அமைச்சர்கள் துரைமுருகன், ஐ பெரியசாமி, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் தகுதியுள்ள ஒரு மகளிர் கூட விடுபடாத வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள உதயநிதி ஸ்டாலின், "மகளிரின் உரிமைக்காக எண்ணற்ற திட்டங்களைத் தந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெயரிலான "கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்", அண்ணா பிறந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, அவற்றை பதிவு செய்கிற பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப்பணிகளின் அடிப்படையில் பெறப்பட்டுள்ள கருத்துக்கள், அதன் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாண்புமிகு முதலமைச்சர் திரு.முகஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் சக அமைச்சர் பெருமக்கள் - அரசு உயர் அதிகாரிகளுடன் பங்கேற்றோம். தகுதியுள்ள ஒரு மகளிர் கூட விடுபடாத வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications