"விட்றாதீங்க".. அடிச்சு பேசிய மோடி.. நாடாளுமன்றத்தில் "டார்கெட் உதயநிதி".. பாஜகவின் பிரம்மாஸ்திரம்
சென்னை: நாளை தொடங்க உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் திமுக எம்பிக்களும், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினும் குறி வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பாஜகவினர் சனாதனம் விவகாரத்தை கையில் எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமுஎகச சார்பில் சென்னை காமராஜர் நேற்று முதல்நாள் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்த மாநாட்டின் தலைப்பில் 'சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது என்று கடுமையாக கூறினார்.

அதோடு, கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது.
சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது, அதாவது மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும் என்று பேசினார்.
சனாதனம் பற்றிய பேச்சு: சனாதனம் குறித்த அவரின் பேச்சு தேசிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அவரின் பேச்சுக்கு எதிராக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பாஜகவினர் பலரும் அவரின் பேச்சால் அரண்டு போய் உள்ளனர். அவருக்கு ஆதரவாகவும் குரல்கள் வர தொடங்கி உள்ளன,
மோடி போட்ட ஆர்டர்: இந்த நிலையில்தான் அமைச்சர் உதயநிதிக்கு உரிய பதிலடி தர வேண்டும்' என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். உதயநிதியின் சனாதன கருத்து குறித்து பதிலடி கொடுக்க மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கி உள்ளார். எந்த மதத்தையும் தவறாக பேசக்கூடாது; சனாதன தர்மத்தை யாரேனும் தவறாக பேசினால் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி உரையாடியபோது சனாதனம் குறித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேசிய அரசியலில் திமுக கவனம் பெற்றுள்ள நிலையில் தற்போது திடீரென பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் திமுகவை குறி வைக்க தொடங்கி உள்ளனர். இந்த நிலையில்தான் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பாஜகவினர் உதயநிதி ஸ்டாலினை குறி வைக்கலாம் என்று கூறப்படுகிறது.
சிறப்பு கூட்டம்: நாளை (செப்டம்பர் 18) தொடங்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் செப்டம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 5 நாட்கள் நடைபெற உள்ள இந்த மழைக்கால கூட்டத் தொடருக்கான காரணம் என்ன என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பினர். ஆனால், மத்திய அரசு தரப்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இதில் தேர்தல் ஆணையர் தேர்வுக்குழுவில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கும் மசோதா உள்ளிட்ட மசோதாவை தாக்கல் செய்ய உள்ளனர். அதே சமயம் இதில் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில்தான் திமுக எம்பிக்களும், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினும் குறி வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பாஜகவினர் சனாதனம் விவகாரத்தை கையில் எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எதிர்கட்சிகளை கேள்வி கேட்க வைக்கும் விதமாக பாஜகவினர் இந்த விவகாரத்தை கையில் எடுக்க முடிவு செய்துள்ளனராம்.
அதே சமயம் திமுகவினரும் இதை எதிர்கொள்ள தயாராகவே இருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக சனாதனம் குறித்து கேள்வி எழுப்பினால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கவும் திமுக எம்பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications