கோபுரமாக இருந்தாலும் சரி! குடிசையாக இருந்தாலும் சரி! எனக்கு எல்லாம் சமம் தான்! உதயநிதி பேச்சில் மாஸ்!
சென்னை: ஆற்காடு இளவரசரின் இல்லமாக இருந்தாலும் சரி, கொய்யாதோப்பு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியாக இருந்தாலும் சரி, அனைத்தையும் ஒன்றென கருதி மக்களின் குறைகளை கேட்டறிந்து வருவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேப்பாக்கம் தொகுதியில் அரசு திட்டங்கள் மூலம் பயன்பெற்றவர்களில் ஆண்களைவிட பெண்களே அதிகம் எனக் கூறி பெருமிதப்பட்டார்.
சட்டசபையில் குறிப்பாக செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்முறையாக உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையின் தொகுப்பு வருமாறு;

அரசு துறைகள்
நான், அரசியலையும் அரசையும் அருகில் இருந்து கவனிக்கும் வாய்ப்பை பெற்றவன். அதன்மூலம், அரசு துறைகள் குறித்து ஓரளவுக்கு சில விஷயங்களையும் தெரிந்துவைத்திருந்தேன். ஆனாலும் இந்தத் துறைகளை நெருங்கி சென்று பார்க்கும் வாய்ப்பை என் தொகுதி பணிகள்தான் எனக்கு வழங்கின. தொகுதியில் தெருத்தெருவாக, வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தி கோரிக்கைகளை கேட்டறிந்தோம். தொகுதியில் மாநகராட்சி பள்ளிகள், அங்கன்வாடிகள், பொதுக் கழிப்பிடங்கள்... என எல்லா இடங்களையும் சுற்றி வந்தோம்.

ஆற்காடு இளவரசர்
ஆற்காடு இளவரசரின் இல்லமாக இருந்தாலும் சரி, கொய்யாதோப்பு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியாக இருந்தாலும் சரி, அனைத்தையும் ஒன்றென கருதி மக்களின் குறைகளை கேட்டறிந்தோம். பலதரப்பட்ட சமூகச் சூழல், வேறுபட்ட பொருளாதார நிலையில் வாழும் மக்களை சந்தித்ததன் மூலம் அவர்களின் தேவைகளையும், உணர்வுகளையும் புரிந்துகொள்ள கிடைத்த பயிற்சி பட்டறையாகத்தான் இந்த ஓராண்டு தொகுதிப் பணிகளை பார்க்கிறேன்.

செங்கல்
இதேபோல மனுக்கள். மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்கூட தன் துறை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசும்போது, 'இந்த ஆட்சி அமைய காரணமாக இருந்தது ஒன்று மனுக்கள். மற்றொன்று செங்கல்' என்றார்.
மொத்தத்தில், தமிழகத்துக்கு நல்லது செய்வார் என்று, நம் தலைவர் அவர்களை நம்பிய மக்கள். அவர்கள்தான் காரணம். மனுக்கள், ஆட்சி மாற்றத்துக்கான அடிக்கல் என்று சொல்லலாம்.

முதல்வரின் முகவரி
அந்த வகையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் மூலம் பெறப்பட்ட மனுக்களில் 2,29,216 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து இத்துறை, 'முதல்வரின் முகவரி' என்று தனித்துறையாக அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 11,42,960 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.

மலைத்துப் போனோம்
இதேபோல் எங்களுடைய தொகுதியில், கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, முதியோர்-ஆதரவற்றோர் ஓய்வூதியம், வீடு, பட்டா, மின் இணைப்பு, கொரோனா இறப்பு இழப்பீடு... இப்படி பல்வேறு கோரிக்கைகளுடன் வந்து குவிந்த மனுக்களைப் பார்த்து ஆரம்பத்தில் மலைத்துப் போனோம்.

மனுவுடன் நிற்பார்கள்
தொகுதியில் இறங்கினாலே மனுவுடன் நிற்பவர்கள், ஏற்கெனவே கொடுத்த மனுக்களின் நிலை குறித்து நினைவுபடுத்துபவர்கள்... இப்படி மக்கள் என்னை மனுவுடன் துரத்த, தீர்வை நோக்கி நான் அந்தத் துறை அமைச்சர்களைத் துரத்த இந்தத் தொடர் துரத்தலில் கிடைத்த பாடங்களின் வழியாகத்தான் பல்வேறு அரசுத் துறைகளை நெருங்கிச் சென்று தெரிந்துகொள்ளும் வாய்ப்பை நான் பெற்றேன்.












Click it and Unblock the Notifications