உள்ளாட்சித் தேர்தல் இன்டெர்வல்... சட்டமன்ற தேர்தல் தான் கிளைமாக்ஸ்- உதயநிதி ஸ்டாலின்
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற வெற்றி வெறும் இன்டெர்வல் தான் என்றும், சட்டமன்றத் தேர்தலில் தான் கிளைமாக்ஸை பார்க்க போகிறீர்கள் எனவும் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. கு.க.செல்வம் ஏற்பாடு செய்த இலவச பயிற்சி மையத்தை தொடங்கி வைத்து பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் சிலர் காலைவாரி விட்டுள்ளதாகவும் அதைப்பற்றி கவலைக்கொள்ள தேவையில்லை எனவும் உதயநிதி தெரிவித்தார்.

ஆயிரம் விளக்கு
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. கு.க.செல்வம் இலவச கணினி பயிற்சி மையத்தை நிறுவியுள்ளார். அதனை தொடங்கி வைத்து பேசிய அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி, காரில் தாம் வரும் போது தொகுதி எப்படி இருக்கிறது என செல்வத்திடம் கேட்டதாகவும், அதற்கு தொகுதி நன்றாக இருக்கிறது, ஆனால் தாம் தொகுதி மாறப்போவதாகவும் கூறியதாகவும் தெரிவித்தார். ஆனால் அவ்வளவு எளிதாக கு.க.செல்வத்தை விடமாட்டோம் என்றும், அவரைப் போன்றவர்கள் ஆயிரம் விளக்கு தொகுதியில் தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

விளக்கம்
இதை அவர் குறிப்பிட்டு பேசியதன் விளக்கத்தை பார்த்தோம் என்றால், ஆயிரம் விளக்கு தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்பதற்காக செல்வம் தொகுதி மாறுகிறேன் என கூறியதாக கருதப்படுகிறது. ஆனால், தமக்கு போட்டியிட விருப்பமில்லை என்பதை சூசகமாக தெரிவிக்கும் வகையில் அவ்வளவு எளிதாக இந்த தொகுதியில் இருந்து செல்வத்தை விடமாட்டோம் என உதயநிதி பேச்சுவாக்கில் விளக்கம் அளித்திருப்பதாக பார்க்க முடிகிறது. கருணாநிதி இப்படித்தான் முக்கியமான விவகாரத்தை கூட போகிற போக்கில் அவரது பேச்சில் இலைமறை காயாக சுட்டிக்காட்டிவிடுவார்.

கிளைமாக்ஸ்
அதைத்தொடர்ந்து பேசிய உதயநிதி, உள்ளாட்சித் தேர்தலில் திமுக அடைந்துள்ள வெற்றி வெறும் இண்டெர்வல் தான் என்றும், வரும் 2021-ம் ஆண்டும் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தான் கிளைமாக்ஸை பார்க்கப்போகிறீர்கள் எனவும் குறிப்பிட்டார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தலில் திமுகவில் வெற்றி பெற்ற சிலரே காலை வாரிவிட்டார்கள் என்றும், இருப்பினும் அவர்களை பற்றி கவலைக்கொள்ளத் தேவையில்லை என்றும் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

தயாநிதி மாறன்
உதயநிதி ஸ்டாலின் பேசுவதற்கு முன் பேசிய தயாநிதி மாறன் எம்.பி., கு.க.செல்வத்தை பார்த்து திமுகவுக்கு கிடைத்த பெரிய செல்வம்(பணம்) இவர் என புகழாரம் சூடியிருந்தார். அதன்பிறகு அதனை சுட்டிக்காட்டிய உதயநிதி, தயாநிதி மாறனை விடவா செல்வம் செல்வத்தில் உயர்ந்தவர் என கலாய்த்தார். இதனால் கூட்டத்தில் நெளிந்த தயாநிதியை பார்த்து, விளையாட்டுக்கு கூறினேன் கோபித்துக்கொள்ளாதீர்கள் என உதயநிதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications