உதயநிதி ஸ்டாலின் பேசியதில் எந்த தவறும் இல்லை! நடக்க வேண்டிய வேலை நடக்கும்! கே.எஸ்.அழகிரி சப்போர்ட்!
சென்னை: உங்க அப்பா வீட்டுப் பணமா என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், அவரது பேச்சில் எந்த தவறும் இல்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைமையகத்திலிருந்து வந்த அவசர அழைப்பை ஏற்று நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்ற கே.எஸ்.அழகிரி, முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் பேச்சு வழக்கில் கூறியிருக்கிறார் என்றும் அதை எப்படி தவறு எனச் சொல்ல முடியும் எனவும் வினவியுள்ளார்.

தமிழக மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்யாமல் உதயநிதி பேச்சை வைத்து மத்திய பாஜக அரசு அரசியல் ஆதாயம் தேடக் கூடாது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக டெல்லி சென்று வந்ததை பெரிது படுத்துகிறார்கள், மணிப்பூர் பற்றி எரிந்த போது ஒரு முறையாவது மோடி நேரில் சென்றாரா எனவும் அழகிரி வினவியுள்ளார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் எங்கிருந்தாலும் நடக்க வேண்டிய வேலைகள் நடக்கும் என்றும் மழை தொடங்கியதும் அமைச்சர்களை அந்தந்த மாவட்டங்களுக்கு முதலமைச்சர் அனுப்பி வைத்து விட்டார் எனவும் கூறியுள்ளார்.
மணிப்பூர் விவகாரத்தை மத்திய பாஜக அரசு வேடிக்கை பார்த்துவிட்டு தமிழக அரசு மீது கண்மூடித்தனமாக வெறுப்பைக் காட்டக் கூடாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் கே.எஸ்.அழகிரி பாடமெடுத்தார். தமிழக மக்கள் பேரிடரில் சிக்கித் தவிக்கும் நிலையில் பேரிடர் நிவாரண நிதியாக மத்திய அரசு எதுவும் தரவில்லை என்றும் வழக்கமாக தர வேண்டிய நிதியை மட்டுமே தந்துள்ளார்கள் எனவும் கூறியுள்ளார்.
இதனிடையே கே.எஸ்.அழகிரியை காங்கிரஸ் தேசியத் தலைமை டெல்லி அழைத்துள்ளதன் பின்னணில், நாடாளுமன்றத் தேர்தல் இட பங்கீடு குறித்தும், அழகிரி மீதான புகார் ஓலைகள் பற்றியும் விசாரிப்பதற்காக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு கார்த்தி சிதம்பரம் மிகக் கடுமையாக டெல்லியில் முகாமிட்டு போராடி வரும் நிலையில் அழகிரி டெல்லி சென்றிருப்பது காங்கிரஸ் உட்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications