"ஆக, திமுக சொல்றதை தானே, அதிமுக செய்யுது.. அப்ப சரியாதானே செயல்படுது" உதயநிதிக்கு குவியும் கேள்விகள்
உதயநிதி பதிவிட்ட ட்வீட், திமுக-அதிமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது
சென்னை: "ஆக, திமுக சொல்றதை தானே, அதிமுக செய்கிறது? அப்பறம் ஏன் அதிமுக சரியாக செயல்படவில்லை என்று திமுக கூறுகிறது?" என்று உதயநிதி போட்ட ட்வீட்டுக்கு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.. "ஸ்டாலின் சொல்றார்.. முதல்வர் செய்யறார்" என்ற உதயநிதியின் ட்வீட்டினால், சோஷியல் மீடியா முழுவதுமே அதிமுக - திமுக கட்சியினர் தங்களது கமெண்ட்களால் அதகளப்படுத்தி வருகின்றன!
கொரோனா தொற்று உச்சத்துக்கு போன காலத்தில் இருந்தே, திமுக சுறுசுறுப்பாகிவிட்டது.. ஒரு பக்கம் தடுப்பு நடவடிக்கையில் அக்கட்சி இறங்கினாலும், அதிமுக அரசை தினமும் ஒரு கேள்வியை கேட்டு கொண்டே இருந்தது.. பல கேள்விகளுக்கு அதிமுக தரப்பு பதில் சொன்னாலும், சிலவற்றுக்கு சரியான விளக்கத்தை தர முடியாத சூழலும் ஏற்பட்டது.
குறிப்பாக கோயம்பேடு, டாஸ்மாக் விவகாரம், தொற்றை கட்டுப்படுத்த தவறியது போன்றவற்றிற்கு அரசு சரியான பதிலை சொல்ல முடியவில்லை.. அதேசமயம், ஸ்டாலின் விடும் அறிக்கைக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்றும் எடப்பாடியார் ஒருகட்டத்தில் டென்ஷன் ஆகவே செய்தார்.

அறிவிப்புகள்
இப்போது பொதுப் போக்குவரத்தான பஸ் இயக்குவது, இ-பாஸ் முறை ரத்து செய்யப்படுவது, உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.. இந்த அறிவிப்புகளை அடுத்து, திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார்.

இ-பாஸ்
அதில், "தமிழகத்தில் இ-பாஸ் ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அதனை அச்சுப்பிசகாமல் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்... பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து உட்பட அனைத்திலும் தமிழகத்தில் அறிவிக்கப்படாத முதல்வராக தலைவர் (மு.க.ஸ்டாலின்) சொல்கிறார் அதனை ஈபிஎஸ் செய்கிறார்.' என தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

ஆதரவு
உதயநிதி போட்ட இந்த ட்வீட், அதிமுக - திமுக இரு தரப்பினரிடையே மிகப்பெரிய ஆதரவு, எதிர்ப்பு கருத்துக்களை தாங்கி வருகிறது.. இந்த ட்வீட்டை கழக உடன்பிறப்புகள் பாராட்டி வருகிறார்கள்.. திமுக தலைவர் சொன்னது அத்தனையுமே நடந்து வருகிறது என்றும், மக்களுக்காக ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்தான் தற்போது அமலாகி வருகின்றன என்றும் ட்வீட் போட்டு மகிழ்கிறார்கள்.

விமர்சனங்கள்
அதேபோல, சோஷியல் மீடியாவில் அதிமுகவினர் கொந்தளித்துள்ளனர்.. "காக்கா உட்கார பனை மரம் விழுந்துச்சாம்" என்கிறார்கள்.. "கடைசிவரைக்கும் @mkstalin அறிவிக்கப்படாத முதல்வராகவே தான் இருப்பார். கவலை வேண்டாம்" என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.
Recommended Video

தேர்தல்
மேலும் சிலரோ, "நல்ல விஷயம், ஸ்டாலின் சொல்கிறார், எடப்பாடி செய்கிறார்.. வருகிற தேர்தலில் மீண்டும் முதல்வராக எடப்பாடியே வரட்டும்.. தேவையில்லாமல் திமுக எதற்கு? பணம் காசு செலவு செய்து கால நேர விரயத்தையும் தடுக்கலாமே?" என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். "ஆக, திமுக சொல்றதை தானே, அதிமுக செய்கிறது? அப்பறம் ஏன் அதிமுக சரியாக செயல்படவில்லை என்று திமுக கூறுகிறது?" என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.. ஆனால் இதனால் சோஷியல் மீடியா முழுவதுமே அதிமுக - திமுக கட்சிகள் அதகளப்படுத்தி வருகின்றன!












Click it and Unblock the Notifications