தரையை தொடாத 2 விஷயம்.. வெட்ட வந்த இடத்தில் அறிவியல் அதிசயம்.. ஜாசிம் கோழிக்கடையில் ஒரே கூட்டமாமே
சென்னை: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சொரணூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு கோழி இறைச்சிக் கடையில், பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும் ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இதை பற்றின போட்டோக்களும், வீடியோக்களும்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன. என்ன நடந்தது அந்த கோழிக்கு?
சொரணூர் பகுதியில் கோழி இறைச்சிக் கடை நடத்தி வருபவர் ஜாசிம்.. இவருடைய கடைக்கு, வழக்கம்போல மன்னார்காட் பகுதியில் இருந்து விற்பனைக்காகப் புதிய கோழிகள் கொண்டு வரப்பட்டன.

கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த கோழிகளை ஒவ்வொன்றாக எடுத்து வகைப்படுத்தியபோது, அதில் இருந்த ஒரு குறிப்பிட்ட கோழி ஜாசிமின் கவனத்தை ஈர்த்தது. ஏதோ ஒரு வித்தியாசம் இருப்பதை அறிந்து, உற்று நோக்கினார்.. அப்போதுதான் தன் வாழ்நாளில் கண்டிராத ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
கோழிக்கடையில் ஒரே கூட்டம்
அந்தக் கோழிக்கு இரண்டு கால்களுக்குப் பதிலாக, நான்கு கால்கள் இருந்தன. இதைக்கண்டு நிலைகுலைந்து போன கடை உரிமையாளர் ஜாசிம், ஆச்சரியத்தில் உறைந்து போனார். அந்த அபூர்வ கோழியின் உடலமைப்பை உன்னிப்பாகக் கவனித்தபோது, அதன் முன்னால் இருக்கும் இரண்டு கால்களும் சாதாரண கோழிகளைப் போல நல்ல நீளமாகவும் பலமாகவும் காணப்பட்டன.
ஆனால், அதற்குப் பின்புறமாக மேலும் இரண்டு கால்கள் முளைத்திருந்தன. அந்தப் பின் கால்கள் இரண்டும் மற்ற கால்களை விட அளவில் சற்று சிறியதாகக் காட்சியளித்தன. மிகவும் விசித்திரமாக, அந்த கோழி தரையில் நடந்து செல்லும்போது, அதன் பின்புறம் உள்ள அந்த இரண்டு சிறிய கால்களும் தரையைத் தொடவே இல்லையாம்.. முன்னால் இருக்கும் இரண்டு நீளமான கால்களை மட்டுமே பயன்படுத்தி அந்த கோழி கேஷுவலாக நடக்கிறதாம்.
விந்தையான 4 கால் கோழி
இந்த விந்தையான நான்கு கால் கோழி பற்றிய தகவல், தீயாய் அந்தச் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் மிக வேகமாகப் பரவியது. அறிவியல் அதிசயமா அல்லது இயற்கையின் விநோதமா என்று குழம்பிய அப்பகுதி மக்கள், இந்த அபூர்வ உயிரினத்தை நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற பெரும் ஆர்வத்துடன் ஜாசிமின் இறைச்சிக் கடையை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர்.
கடையின் முன்பு திரண்ட பொதுமக்கள் பலரும், அந்தக் கோழியை வியப்புடன் பார்த்துச் சென்ற வண்ணம் உள்ளனர். சிலர் தங்களது மொபைல் போன்களில் அதனைப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து வருவதால், இந்தச் செய்தி தற்போது இணையத்திலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
பொதுவாக இறைச்சிக் கடைக்கு வரும் கோழிகள் அனைத்தும் அன்றாட விற்பனைக்காக வெட்டப்படுவது வழக்கம். ஆனால், தன்னிடம் வந்திறங்கிய இந்த நான்கு கால் கோழியை ஒரு அதிசயப் பிறவியாகவே ஜாசிம் கருதுகிறார்.
ஜாசிம் திட்டவட்டம்
மக்கள் எவ்வளவு ஆர்வம் காட்டினாலும், பார்ப்பதற்கு மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் இந்த அபூர்வ கோழியைத் தான் யாருக்கும் விற்பனை செய்யப் போவதில்லை என்றும், அதனைத் வெட்டாமல் தனது சொந்தப் பொறுப்பில் பத்திரமாக வளர்க்கப் போவதாகவும் கடை உரிமையாளர் ஜாசிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இயற்கையின் இந்த விசித்திரப் படைப்பு சொரணூர் பகுதி மக்களிடையே இன்னும் சில நாட்களுக்கு விவாதத்தையும் வியப்பையும் ஏற்படுத்த போகிறது போலும்.
விற்பனைக்காகக் கொண்டு வரப்படும் கோழிகளுக்கு மத்தியில், இயற்கையின் விசித்திரப் படைப்பாக நான்கு கால்களுடன் வந்திறங்கிய ஒரு அபூர்வ கோழி ஒட்டுமொத்தப் பகுதியையும் தன் பக்கம் உற்று நோக்க வைத்துள்ளது. இந்த விந்தையான உயிரினத்தைக் காண்பதற்காக அந்தப் பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டு வருவதால், அந்த இறைச்சிக் கடை இருக்கும் தெருவே இப்போது படு பிசியாகி விட்டதாம்..!!












Click it and Unblock the Notifications