5 சென்ட் நிலம்.. சொத்து பரிமாற்றமும், "மண்ணாங்கட்டி" சட்டமும்.. ஸ்டாலினுக்கு போன பெயிராவின் கோரிக்கை
சென்னை: பதிவுத்துறையில் மக்களுக்கு உதவாத சட்டங்களை பொதுமக்களின் நலன் கருதி மாற்றிட வேண்டும் என்றும் தற்போதைய நடைமுறைக்கு ஏற்றார்போல் காலச்சூழலுக்கேற்ப சொத்து பரிமாற்று சட்டத்திற்கு உட்பட்டு சட்டத்தை வரையறுக்க வேண்டும் என்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு, தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனரும், தேசியத் தலைவருமான டாக்டர் ஆ.ஹென்றி, விரிவான கடிதம் ஒன்றை முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியிருக்கிறார்.. அந்த கடிதத்தில் உள்ளதாவது:

"மாநிலத்தின் வளர்ச்சிக்கும் வருவாய் ஈட்டுவதிலும் பெரும் பங்கு வகிக்கும் துறைகளில் மிகவும் முக்கியத்துறை பதிவுத்துறை ஆகும். இந்திய அளவில் சிறந்த கட்டமைப்பு, இணைய வழி சேவை, நம்பகத்தன்மை, கொண்ட மாநிலங்களின் பட்டியலில் நம்முடைய தமிழ்நாடு பதிவுத்துறை முக்கிய இடம் வகித்தாலும்.
மண்ணாங்கட்டி சட்டம்: இப்படிப்பட்ட பதிவுத் துறையில் பதிவு சட்ட நடைமுறைகள், பெரியார் சொன்னது போன்று "மக்களுக்கு உதவாத மண்ணாங்கட்டி சட்டமாகவே" இருக்கிறது.
இதற்கு காரணம் குறிப்பாக கடலோர பாதுகாப்பு மண்டல பகுதி, மலைகள் பாதுகாப்பு அதிகார குழும பகுதி, தொல்லியல் துறை பகுதி, பாரம்பரிய பாதுகாப்பு ஆணைய பகுதி மற்றும் நினைவுச் சின்னங்கள், விலங்குகள் சரணாலயம், பறவைகள் சரணாலயம், யானை வழித்தடங்கள், அணு மின் நிலையம் மற்றும் அனல் மின் நிலையம் அருகில் உள்ள நிலங்கள்,
காப்புக்காடுகள்: குளங்கள், ஏரிகள், குட்டைகள், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள நிலங்கள், ரயில் பாதை, சுடுகாடு மற்றும் இடுகாடு, கல் மற்றும் மணல் குவாரிகள், செங்கல் சூளைகள், காப்புக்காடுகள் மற்றும் சமூக காடுகள், இந்திய விமானப்படை மற்றும் இந்திய விமான நிலைய ஆணைய பகுதி, புவியியல் மற்றும் சுரங்கத் துறை உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகில் உள்ள நிலங்கள் குறிப்பிட்ட சுற்றளவிற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திலோ அல்லது நகர் ஊரமைப்பு இயக்குனரகத்திலோ அனுமதி பெற இயலாது.
மேலும் தற்போது மேற்கண்ட பகுதிகளில் 5 சென்ட் 10 சென்ட் நிலங்கள் கூட விற்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் சொத்து பரிமாற்ற சட்டத்திற்கு முரணாக மாநிலம் முழுவதும் பல பகுதிகளில் குறிப்பாக மேலே இந்த கடிதத்தில் வகைப்படுத்தி குறிப்பிட்டுள்ள தடை செய்யப்பட்ட பகுதியின் அருகில் அமைந்துள்ள நிலங்கள் தற்போது பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
வருவாய் இழப்பு: இதனால் பொதுமக்கள் தங்களின் சொத்துக்களை அவசர தேவைக்கு (குறிப்பாக பிள்ளைகளின் பள்ளி மற்றும் கல்லூரிக்கான கல்வி கட்டணம், குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ செலவு மற்றும் திருமண காரியங்கள் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு) விற்க இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதோடு, இதனால் பதிவுத்துறைக்கும் பெரும் வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.
ஆகவே தமிழ்நாடு முதலமைச்சர், தங்களை நம்பி வாக்களித்து தேர்ந்தெடுத்த பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, மேற்கண்ட பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு காண்பதற்கும், இதனை களைவதற்கும் போர்கால அடிப்படையில், தற்போதைய நடைமுறைக்கு ஏற்றார் போல் காலச்சூழலுக்கேற்ப சொத்து பரிமாற்று சட்டத்திற்கு உட்பட்டு, உடனடியாக சட்ட திட்டங்களை மாற்றி அமைத்து, உரிய திருத்தங்களை மேற்கொண்டு எளிமைப்படுத்த வேண்டும்.
பெயிரா வேண்டுகோள்: அத்துடன், மாநிலம் முழுவதும் உள்ள மேற்கண்ட வகைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் அமைந்துள்ள நிலங்களை பொதுமக்கள் வழக்கம்போல பதிவு செய்யும் வகையில் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உரிய வழிவகை செய்ய வேண்டும்" என்று பெயிரா தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி தன்னுடைய கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications