வரலாறு காணாத வகையில் வர மிளகாய் விலை உயர்வு! குடும்பத் தலைவர்கள்.. இல்லத்தரசிகள் கலக்கம்!
சென்னை: கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.180 க்கு விற்பனை செய்யப்பட்ட வர மிளகாய் தற்போது கிலோ ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர் மழை காரணமாக மிளகாய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வர மிளகாய் விலை கிடுகிடு உயர்வால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பத் தலைவர்களும், இல்லத்தரசிகளும் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.

வர மிளகாய்
நமது அன்றாட சமையலில் மிளகாய் பொடி இன்றியமையாத ஒரு பொருளாக திகழ்கிறது. மிளகாய் பொடியை என்னதான் பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்தாலும் பெரும்பாலானோர் தங்கள் கைப்பட வர மிளகாயை கடைகளிலும் மண்டிகளிலும் குறைந்த விலைக்கு வாங்கி அதை மில்லில் கொடுத்து அரைத்து மிளகாய் பொடியாக்கி சமையலில் பயன்படுத்துவார்கள். குண்டூர் மிளகாய், ராமநாதபுரம் மிளகாய் என அதில் பல வகைகள் இருக்கின்றன.

கிடு கிடு
இதனிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.180 க்கு விற்பனை செய்யப்பட்ட வர மிளகாய் தற்போது கிலோ ரூ.300க்கு விற்பனை ஆவதால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர். ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு வர மிளகாய் வரத்து குறைந்துள்ளதாலும், அரேபிய நாடுகளுக்கு மிளகாய் ஏற்றுமதி அதிகரித்துள்ள காரணத்தாலும் இந்த விலை உயர்வுக்கு காரணமாக தெரிவிக்கப்படுகிறது.

விலை குறையும்
இதே போல் தமிழகம், கர்நாடகம், ஆந்திரா என பல இடங்களிலும் கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருவதால் வர மிளகாய் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் 15 நாட்களுக்குள் நிலைமை சீராகி மீண்டும் பழைய விலைக்கே மிளகாய் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக மழைக்காலங்களில் வர மிளகாய் விலை உயர்வது வாடிக்கை தான். ஆனால் அதற்காக இந்தாண்டை போல் இவ்வளவு விலை உயர்ந்ததில்லை.

மிளகாய் வியாபாரம்
வர மிளகாய் விலை குறைந்த பிறகு வாங்கிக் கொள்ளலாம் என பெரும்பாலானோர் தவிர்ப்பதால் மிளகாய் வியாபாரம் டல் அடிக்கத் தொடங்கியிருப்பது கவனிக்கத்தக்கது. இதனிடையே இந்த விலை உயர்வு காரணமாக ஹோட்டல்களில் மிளகாய் சட்னிக்கு பதில் மாற்று சட்னி வகைகள் கொடுக்கப்படுகின்றன.











Click it and Unblock the Notifications