"கலைஞர்.." வாய் நிறைய கூப்பிட்ட வானதி சீனிவாசன்! "அவர் மட்டும் உறுதுணையா இல்லைன்னா.." உருக்கமான உரை
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி இனி அரசு விழாவாக கொண்டாடுவதை வரவேற்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சட்டசபையில் பேசினார்.
Recommended Video
முதல்வர் ஸ்டாலின் இன்று 110-வது விதியின் கீழ் சட்டசபையில் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் இதில் அறிவிப்பு வெளியிட்டார்.
அதேபோல் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதி சிலை அமைக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

வானதி சீனிவாசன்
முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பாராட்டி இருந்தனர். தமிழ்நாட்டில் 5 முறை முதல்வராக இருந்தவருக்கு இந்த மரியாதை சிறப்பானது என்று திமுக கூட்டணி மற்றும் கூட்டணி அல்லாத கட்சித் தலைவர்களும் பாராட்டினர். இந்த விவாதத்தில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மிகவும் உருக்கமாக பேசினார். அதில், 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக தேசிய அளவில் பாஜகவிற்கு திமுக ஆதரவு அளித்தது.

கலைஞர்
காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக தேசிய அளவில் எந்த கட்சியும் முழுமையாக 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய முடியாது என்ற கருத்து இருந்தது. ஆனால் 5 ஆண்டுகள் காலம் வாஜ்பாய்க்கு உறுதுணையாக இருந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. கமலாலய தலைவர்களோடு நெருக்கமாக இருந்து ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தவர் கலைஞர். பாஜக ஆட்சி அன்று நடக்க அவர் காரணமாக இருந்தார்.

பாராட்டி பேச்சு
அத்தனை ஆண்டுகாலம் நட்பாக இருந்தவர் அவர். பிரதமர் மோடியும் இவரின் அரசியல் அனுபவத்தை பாராட்டி உள்ளார். அவர் உடல்நிலை சரியில்லாத போது பிரதமர் மோடி கோபாலபுரம் வந்து அவரை நேரடியாக பார்த்தார். அவரின் அரசியல் அனுபவம், மாண்பு காரணமாக, அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத போதும், அவரின் மறைவின் போது நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

திமுக கவனம்
அப்படிப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி இனி அரசு விழாவாக கொண்டாடுவது உண்மையில் சிறப்பான விஷயம் என்று குறிப்பிட்டார். வானதி சீனிவாசன் இப்படி திடீரென முன்னாள் முதல்வர் கருணாநிதியை பாராட்டி பேசியது பலரையும் வியப்பிற்கு ஆளாக்கியது. அதிலும் கருணாநிதி என்று கூறாமல் கலைஞர்.. கலைஞர் என்று வாய்நிறைய கூப்பிட்டது கவனம் ஈர்த்தது.












Click it and Unblock the Notifications