"சர்ச்சைக்கு இடமில்லை! பெண்ணுக்கும் பிழை இல்லை.." தெய்வம் தொழாஅள் குறளுக்கு கவிஞர் வைரமுத்து விளக்கம்
சென்னை: முப்பால், தெய்வ நூல் என்று அழைக்கப்படும் திருக்குறளுக்கு இப்போது கவிஞர் வைரமுத்து உரை எழுதியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா நாளை மறுநாள் சென்னையில் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே தெய்வம் தொழாஅள் எனத் தொடங்கும் 55வது திருக்குறளுக்கான விளக்கத்தைக் கவிஞர் வைரமுத்து அளித்திருக்கிறார்.
உலகப் பொதுமறையான திருக்குறள் 133 அதிகாரங்களுடன் மொத்தம் 1330 குறட்பாக்களைக் கொண்டுள்ளது. அது அறம், பொருள், இன்பம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் இந்த இரண்டு அடிக் குறளில் வள்ளுவர் கொடுத்திருப்பார்.

பொய்யா மொழியான திருக்குறளுக்குக் கவிப்பேரரசு வைரமுத்து சில மாதங்களுக்கு முன்பு உரை எழுதும் பணிகளை ஆரம்பித்தார். 'வள்ளுவர் மறை, வைரமுத்து உரை' என்று தலைப்பில் அவர் எழுதியுள்ள உரை நாளை மறுநாள் அதாவது ஜூலை 13ம் தேதி வெளியிடப்படுகிறது. சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார். முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் பெற்றுக்கொள்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான வாழ்த்துரையை முனைவர்கள் இறையன்பு மற்றும் பரவீன் சுல்தானா வழங்கும் நிலையில், ஏற்புரையைக் கவிப்பேரரசு வைரமுத்து வழங்குகிறார்.
இதற்கிடையே 55வது திருக்குறளுக்குத் தனது உரை விளக்கம் குறித்து சில கருத்துகளை வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
என்பதே அந்தக் குறளாகும்.
தெய்வம் தொழாஅள்
— வைரமுத்து (@Vairamuthu) July 11, 2025
கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை’
இந்தக் குறளுக்கு
என்ன சொல்கிறது
வள்ளுவர் மறை
வைரமுத்து உரை?#திருக்குறள் | #திருவள்ளுவர்#வள்ளுவர்மறை_வைரமுத்துஉரை pic.twitter.com/arj9fsGhV3
இது தொடர்பாக வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோவில் விளக்கமளித்துள்ளார். அதில் அவர், "வள்ளுவர் படைத்த 55ஆவது குறள் காலம்காலமாகச் சர்ச்சைக்குள்ளாகி வந்துள்ளது. கடவுளைத் தொழ மாட்டாள்.. கணவரையே தொழுதிடுவாள்.. அப்படிப்பட்ட இல்லறத் தலைவி பெய் என்று சொன்னால் மழை பெய்துவிடும் என்பது பொருள் என்று காலங்காலமாகச் சொல்லப்பட்டு வந்தது.
இதுதான் பொருள் என்றால் அது சர்ச்சைக்குத் தான் ஆளாகும். அந்தச் சர்ச்சையை நான் எனது உரையில் சரி செய்திருக்கிறேன். கட்டமைக்கப்பட்ட தெய்வங்களைத் தொழாமல் கட்டி வந்த கணவரைத் தொழும் ஒரு பெண் பெய் என்று சொன்னவுடன் பெய்யும் மழை எப்படி நன்மை தருமோ அப்படி நன்மை தருவாள் என எழுதியிருக்கிறேன். இதன் மூலம் சர்ச்சைக்கு இடமில்லை. பெண்ணுக்கும் பிழை இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications