டெல்டாவில் நிலக்கரி சுரங்கத்தை தடுக்க கண்டன தீர்மானம் தேவை.. வைத்திலிங்கம் கோரிக்கை
சென்னை: டெல்டாவில் நிலக்கரி சுரங்கத்தை தடுக்க கண்டன தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என ஒரத்தநாடு எம்எல்ஏ வைத்திலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். அது போல் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனும் அதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.
நிலக்கரி உற்பத்தியில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு நிலக்கரி சுரங்க ஏலத்தில் 29 நிறுவனங்களுடன் இதுவரை 6 ஏலங்களில் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது. 7ஆவது ஏலம் கடந்த மாதம் 29ஆம் தேதி தொடங்கியது.
அதன்படி தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் 106 நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஏலம் கோரப்பட்டுள்ளது. தமிழகத்தில் தஞ்சை, அரியலூர், கடலூர் மாவட்டங்களில் புதிதாக நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஏலம் கோரப்பட்டுள்ளது.

இதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இன்றைய தினம் திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா மற்றும் அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன் ஆகியோர் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அதன் மீது உறுப்பினர்கள் பேசினர்.
அந்த வகையில் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ வைத்திலிங்கம் பேசுகையில் நிலக்கரி சுரங்கத்திற்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார். அது போல் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறுகையில் நிலக்கரி சுரங்கம் விவகாரத்தில் தமிழக அரசிடம் கருத்து கேட்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்கத்தை எதிர்த்து பேரவையில் கண்டன தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார்.
அது போல் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறுகையில், சோறு முக்கியமா, கரண்ட் முக்கியமா என்றால் சோறுதான் என்பதில் மாற்று கருத்து இல்லை. நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதாக வெளியான இடங்கள் வேளாண் மண்டலங்களாக கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களை ஏலம் எடுக்கும் நடைமுறை நிச்சயம் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினருக்கு தெரியும். அவர்கள் ஏன் இதை வேளாண் மண்டலம் என கூறி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கங்களை அமைக்கும் முடிவை கைவிடக் கோரி தமிழக பாஜக சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications