Valimai: பாதுகாப்பு முக்கியம்.. "மேலிடத்தை" அணுகாத போனி டீம்- அஜித்தின் வலிமை தள்ளிப்போனது எப்படி?
சென்னை: தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வலிமை படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் வலிமை படம் ஒத்திவைக்கப்பட்டதற்கு பின் என்ன நடந்தது என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.
இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார், ஹீமா குரேஷி ஆகியோர் நடிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் வலிமை படம் எடுக்கப்பட்டுள்ளது. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து படத்தை தயாரித்து உள்ளனர்.
இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. படத்தின் டிரெய்லர், டீசரும் வெளியான நிலையில் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

வதந்தி
ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் குறித்த அறிவிப்பு கடந்த புதன் கிழமை வெளியானது. ஆனால் செவ்வாய் கிழமையே தியேட்டர்களை தமிழ்நாடு அரசு மூட போகிறது என்ற பொய்யான வதந்தி பரவியது. அப்போதே வலிமை படம் வெளியாகாது என்று பொய்யான செய்திகள் வெளியாகின. ஆனால் ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் தரப்போ படத்தை வெளியிடுவதில் ஓரளவிற்கு உறுதியாக இருந்தது.

தியேட்டர்களுக்கு அனுமதி
இதையடுத்து தமிழ்நாட்டில் ஓமிக்ரான் கேஸ்கள் உயர்வதை காரணம் காட்டி புதன் கிழமை அன்று புதிய கட்டுப்பாட்டு விதிகள் முதல்வர் ஸ்டாலின் மூலம் வெளியிடப்பட்டது. அதன்படி திரையரங்கில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. தியேட்டர்களுக்கு அனுமதி இருந்தாலும் முழு அனுமதி இல்லை. அதேபோல் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது.

படம் குறித்த தகவல் இல்லை
இதனால் வலிமை படத்தின் வருமானம் பெரிய அளவில் பாதிக்கும். மற்ற ரேஸில் இருந்த ஆர்ஆர்ஆர் படங்கள் எல்லாம் முன்பே ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. ஆனால் வலிமை குறித்த அறிவிப்பு மட்டும் வெளியாகாமல் தள்ளிப்போய்கொண்டே இருந்தது. இதனால் ரசிகர்கள் பலர் படம் வெளியாக போகிறது. 50 சதவிகித கூட்டம் இருந்தாலும் அதை வைத்தே ரிலீஸ் செய்ய போகிறார்கள் போல என்று நம்பிக்கையோடு இருந்தனர். இன்னும் சில ரசிகர்களோ இப்போது ரிலீஸ் செய்து ரிஸ்க் எடுக்க கூடாது என்றும் கமெண்ட் செய்து வந்தனர்.

ஒத்திவைப்பு
இந்த நிலையில்தான் தற்போது வலிமை படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நேற்று இது தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில் வலிமை படம் ஒத்திவைக்கப்பட்டதற்கு பின் என்ன நடந்தது என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக வலிமை படத்தில் பணியாற்றிய சிலரிடம் விசாரித்ததில், வலிமை படத்தை வெளியிடுவது குறித்த இரட்டை நிலைப்பாடுதான் இருந்தது. படத்தை இப்போது வெளியிடவில்லை என்றால் விளம்பரத்திற்கு செலவு செய்தது எல்லாம் வேஸ்ட் ஆகிவிடும் என்று கருதப்பட்டது.

போனி தரப்பு
ஆனால் அதே சமயம் ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் தரப்பு இப்போது படத்தை ரிலீஸ் செய்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. படம் ரிலீஸ் ஆன பின் முழு லாக்டவுன் வந்தால் கதை முடிந்தது. அதேபோல் பல மாநிலங்களில் படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறோம். வட மாநிலங்களில் முழு லாக்டவுன் வந்தால் அது பெரிய சிக்கல் ஆகும். இது மக்களையும் பாதிக்கும் என்று தயாரிப்பாளர் தரப்பு கூறி இருக்கிறது. எனவே படத்தை வெளியிட வேண்டாம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.

அஜித் தரப்பு
அதேபோல் நடிகர் அஜித் தரப்பிலும், இப்போது வேண்டாம். நாம் படத்தின் அப்டேட்டையே கொரோனா காரணமாக வெளியிடாமல் இருந்தோம். இப்போது படத்தை வெளியிட்டால் அது நன்றாக இருக்காது. மக்கள் கஷ்டப்படுகிறார்கள். கேஸ்கள் குறைந்த பின் பார்க்கலாம் என்று மக்களின் பாதுகாப்பு குறித்து நடிகர் அஜித் தரப்பும், இயக்குனர் எச் வினோத் தரப்பும் கூறியதாக தகவல்கள் வருகின்றன.

பேச வேண்டாம்
இதன் காரணமாக அரசு தரப்பிடம் தியேட்டரை முழுமையாக திறக்கும்படி எந்த கோரிக்கைகளையும் வலிமை படக்குழு வைக்கவில்லையாம். 100% இருக்கைக்கு அனுமதி கொடுங்கள் என்று வலிமை படக்குழு அரசு தரப்பையும், ஆளும் கட்சி மேலிடத்தையும் அணுகவில்லையாம். அரசின் முடிவை மதிப்போம், எல்லாம் சரியான பின் படத்தை வெளியிட்டுக்கொள்ளலாம். இப்போது தனியாக வெளியிட்டு ரெக்கார்ட் அடிப்பதில் பெருமை கிடையாது என்று படக்குழு முடிவு செய்து படத்தை தள்ளி வைத்துவிட்டதாம்.












Click it and Unblock the Notifications