"எது 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஊழலா.. இதை சொல்ல ஆ. ராசாவுக்கு தகுதி இல்லை.!" டென்ஷனான வானதி சீனிவாசன்
சென்னை: 5ஜி ஏலம் தொடர்பாக ஆ. ராசா விமர்சித்து இருந்த நிலையில், இது தொடர்பாக பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்.
நீண்ட எதிர்பார்ப்பில் இருந்த 5ஜி ஏலம் கடந்த வாரம் தான் நடைபெற்றது. இதில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அலைக்கற்றை ஏலம் போனது.
2ஜி அலைக்கற்றை ஏலத்தில் ஊழல் நடந்ததாகச் சொன்னவர்கள், ஏன் இது தொடர்பாகப் பேசுவதில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து இருந்தனர். இது தொடர்பாக திமுக எம்பி ஆ.ராசா கூட விமர்சித்து இருந்தார்.

ஆதாரம் இருந்தால்
இதனிடையே இந்தக் குற்றச்சாட்டிற்குத் தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் விளக்கம் கொடுத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் வானதி சீனிவாசன் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஊழல் நடந்து இருப்பதாக திமுக எம்பி ராஜா குற்றஞ்சாட்டி உள்ளார். இதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. ஆதாரம் இருந்தால் இதை அவர் நிரூபிக்கலாம். 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் குறித்துப் பேச திமுக எம்பி ஆ.ராசா தகுதி இல்லை.

அதிமுக விவகாரம்
கடந்த 8 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு எவ்வித ஊழல் குற்றச்சாட்டிற்கும் ஆளாகவில்லை. தமிழக திமுகவைச் சேர்ந்த தமிழக அமைச்சர்கள் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டு உள்ளனர். அதிமுக விவகாரத்தைப் பொறுத்தவரை, அது அவர்களின் உட்கட்சி விவகாரம் என்பதால் அதில் பாஜக எப்போதும் தலையிட போவதில்லை. குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் திரௌபதி முர்முக்கு ஆதரவு கேட்டு மட்டுமே அதிமுக சட்டசபை கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். இதைத் தாண்டி அதில் வேறு எந்தவொரு விஷயமும் இல்லை" என்றார்.

கனல் கண்ணன்
கனல் கண்ணன் ஸ்ரீரங்கம் கோவில் அருகே உள்ள பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று கூறி இருந்தார். இதற்காக பாஜக தலைவர் அண்ணாமலையும் கூட ஆதரவு தெரிவித்து இருந்தார். இந்த விவகாரத்தில் உங்கள் நிலைப்பாட்டு என்ன என்ற கேள்விக்கு, "அதை இப்போது கூற வேண்டிய அவசியம் இல்லை. கடவுள் நிந்தனை செய்பவர்கள், அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராகவே எங்கள் நிலைப்பாடு இருக்கும்.

2024 மக்களவை தேர்தல்
அடுத்து வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதில் தற்போது உள்ள இடங்களைக் காட்டிலும் அதிக இடங்களில் வென்று பாஜக நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். மக்களவை தேர்தலுக்குத் தமிழகத்தில் எப்படி கூட்டணி இருக்கும் என இப்போது சொல்ல முடியாது. இதையெல்லாம் தேசிய குழு தான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.
Recommended Video

காங்கிரசுக்குப் பதிலடி
பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சி தலைவர்களைக் குறிவைத்து பாஜக தங்களின் சுயநலத்திற்காக அமலாக்கத் துறையைச் சோதனை நடத்தி வருவதாகக் காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ள நிலையில், இது தொடர்பாகக் கேள்விக்குப் பதில் அளித்த அவர், "எல்லா வகையான குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டு வருவதே காங்கிரஸ் கட்சி தான். எனவே, அவர்களுக்கு இதைச் சொல்ல அருகதை இல்லை" என்று காட்டமாக விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications