ஏமாந்த பயணிகள்.. வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகம் இவ்வளவுதானா? ஆர்டிஐயால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை
சென்னை: வந்தே பாரத் ரயில்களின் வேகம் கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக குறைக்கப்பட்டு வருவது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வந்தே பாரத் ரயில்கள் மட்டுமின்றி மேலும் பல ரயில்களின் வேகமும் குறைக்கப்பட்டுள்ளதாம்.
ரயில் பயணிகளின் பயண வசதியை மேம்படுத்தும் விதமாக பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அதி நவீன சொகுசு வசதிகளை கொண்ட வந்தே பாரத் ரயிலை கடந்த 2019 ஆம் ஆண்டு ரயில்வே அறிமுகம் செய்தது. இந்த வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

வந்தே பாரத் ரயில்: முழுவதும் ஏசி வசதி, சொகுசான இருக்கைகள், தானியங்கி கதவு, பயோ கழிப்பறைகள் என விமானத்திற்கு நிகரான வசதிகளுடன் இந்த வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இந்த ரயிலுக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் சென்னை - கோவை, சென்னை- நெல்லை, சென்னை - மைசூர், கோவை- பெங்களூர் உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன. தற்போது படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
160 கி.மீ வேகம்: வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை அதிவேகத்தில் செல்லும் திறன் கொண்டவை ஆகும். மணிக்கு அதிகபட்சமாக 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டவை வந்தே பாரத் ரயில்கள். இந்த ரயில்களின் சொகுசு வசதி என்பதோடு பயண இலக்கை விரைவாக எட்டிவிடலாம் என்பதால் பயணிகள் மத்தியில் வந்தே பாரத் ரயிலுக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
சராசரி வேகம் 84.48 ஆக குறைவு: வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை அதன் முழு வேக திறனுடன் இயக்கப்படுவது கிடையாது. கடந்த ஆண்டு வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகம் 84.48 ஆக இருந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு ரயிலின் வேகம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது பயணிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திர சேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் வேகம் குறித்து கேட்டுள்ளார்.
இதில் கிடைக்கப்பெற்ற தரவுகளில் தான் தற்போது வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் வேகம் கணிசமாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2020-21 நிதி ஆண்டில் வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகம் 84.48 ஆக இருந்துள்ளது. 2022-23 ஆம் நிதி ஆண்டில் இந்த ரயிலின் வேகம் 81.38 ஆகவும், 2023-24 நிதி ஆண்டில் 76.25 ஆகவும் குறைந்துள்ளது.
ஆக்ரா வழித்தடத்தில் மட்டும்: 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது என்றாலும் கூட எந்த வழித்தடத்திலும் இந்த ரயில் இந்த வேகத்தில் சென்றது இல்லையாம். ஆக்ரா டெல்லி வழித்தடத்தில் மட்டும் அதிகபட்சமாக 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறதாம். வந்தே பாரத் ரயில்கள் மட்டும் இன்றி பிற ரயில்களின் வேகமும் கணிசமாக குறைந்துள்ளதாம்.
பயணிகளுக்கு ஏமாற்றம்?: பல்வேறு வழித்தடங்களின் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெறுவதால் முன்னெச்சரிக்கையாக வேகம் குறைவாக இயக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை அதிவேகத்தில் செல்லக் கூடியது என்பதால் விரைவாக பயண இலக்கை எட்டிவிடலாம் இதனால் நேரம் மிச்சமாகும் எனக் கருதி பயணிகள் பலரும் அதிக கட்டணம் என்றாலும் கூட இந்த ரயில்களில் விரும்பி பயணிக்கிறார்கள். ஆனால், படிப்படியாக வந்தே பாரத் ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டு இருப்பது பயணிகளுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications