பேரறிவாளன் விடுதலை.. ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை.. உச்சநீதிமன்றம் உறுதி.. வன்னியரசு
சென்னை: பேரறிவாளன் விடுதலை மூலம் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு விமர்சித்துள்ளார்.
Recommended Video
1991 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த போது அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், சாந்தன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இவர்கள் 7 பேரும் சிறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறார்கள். எனினும் ஆயுள் தண்டனை முடிந்தும் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.

முன்னாள் முதல்வர்கள்
இதற்காக முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரை நேரில் சந்தித்த பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் 31 ஆண்டுகளாக சட்ட போராட்டத்தை நடத்தினார். இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு பேரறிவாளன் தனது விடுதலை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

உடல்நிலை
இதனிடையே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவருக்கு அவ்வப்போது பரோல் வழங்கப்பட்டது. இதுவரை 5 முறைக்கு மேல் அவருக்கான பரோல் நீட்டிக்கப்பட்டது. இதனிடையே 7 பேரையும் விடுதலை செய்வது என்பது தொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பியும் அவை கிடப்பில் போடப்பட்டது.

பேரறிவாளன்
இந்த நிலையில் பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில் கடந்த மார்ச் 9-ஆம் தேதி ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம். இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் கடந்த 11 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அமைச்சரவையின் முடிவை ஏற்றுக் கொள்ளாததன் மூலம் மிகப் பெரிய அரசியல் சாசன பிழையை தமிழக ஆளுநர் செய்துவிட்டதாக தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

பேரறிவாளன் விடுதலை
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. அதில் சட்டவிதி எண் 142 இன் படி பேரறிவாளன் விடுதலைச் செய்யப்பட்டார்.

வன்னியரசு கருத்து
இதுகுறித்து வன்னியரசு தனது ட்வீட்டில் அவர் கூறுகையில் பேரறிவாளன் விடுதலை மூலம் மாநில அரசின் முடிவே இறுதியானது என்றும் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது. இனியாவது, ஆளுநர் தனக்கு தனித்த அதிகாரம் இருக்கிறது எனும் ஆணவத்தை கைவிட்டு, மாநில அரசோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என வன்னியரசு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications