பல்லக்கு தூக்குவதை ஆதரிப்போரின் கொள்கை.. இதுதான் பார்ப்பனியம்! இதுதான் இந்துத்துவம் - திருமாவளவன்
சென்னை: தருமபுர ஆதீனத்துக்கு பல்லக்கு தூக்குவதற்காகு ஆதரவாக கூச்சலிடுவதற்கு காரணம் அவர்கள் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துகிற கோட்பாடு தான் என விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தருமபுர ஆதீன மடத்தில் பட்டினப் பிரவேச நிகழ்ச்சி தொன்றுதொட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வில் ஆதீனத்தை பல்லக்கில் ஏற்றி சுமந்து செல்வது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
பழமையான சைவ ஆதீனமாக விளங்கும் தருமபுரம் ஆதீனத்தின் ஆதீனகர்த்தராக இருந்த ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அவரை தொடர்ந்து ஆதீனத்தின் 27 வது ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பதவியேற்றார்.
விஸ்வரூபம் எடுத்த பட்டினப் பிரவேச தடை... தருமபுர ஆதீனத்தை நேரில் சந்தித்து ஆலோசித்த மதுரை ஆதீனம்
ஜீயரை சுமக்கும் அடித்தட்டு மக்கள்
பதவியேற்ற நாளிலேயே தருமபுரத்தில் ஆதீனத்தை அடித்தட்டு மக்கள் பல்லக்கில் சுமந்து செல்லும் பட்டினப் பிரவேச நிகழ்ச்சி நடந்தது. இதற்கு அப்போதே எதிர்ப்பு தெரிவித்த திராவிடர் கழகம், "தருமபுர மடத்துக்குப் புதிய ஆதீனகர்த்தராகப் பதவி ஏற்றுள்ள தவத்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் நீண்ட காலத்துக்கு முன்பே தடை செய்யப்பட்ட - மனிதர்கள் தூக்கும் பல்லக்கில் பவனி வரும் பட்டினப்பிரவேசம் என்னும் மனித உரிமையைச் சிறுமைப்படுத்தும் நிகழ்ச்சியைப் புதுப்பித்து வருகிறார்." என்று கண்டனம் தெரிவித்து இருந்தது.
மீண்டும் பட்டினப்பிரவேசம்
இந்த நிலையில், வரும் 22 ஆம் தேதி பட்டினப் பிரவேச நிகழ்ச்சியை தருமபுர ஆதீனம் ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு கோட்டாட்சியர் தடை விதித்ததற்கு இந்து அமைப்பினரும், பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கோட்டாட்சியரின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு ஆன்மீக சமய பாதுகாப்பு பேரவை, தமிழ்நாடு கோயில்கள் மற்றும் திருமடங்கள் பாதுகாப்பு பேரவை ஆகிய அமைப்புகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
சட்டப்பேரவையில் விவாதம்
இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி தர வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இதை வைத்து சிலர் அரசியல் செய்ய முயல்வதாகவும், நீதிமன்றத்துக்கு இது கொண்டு செல்லப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். திமுக இந்து மதத்துக்கு எதிரி இல்லை என்று கூறிய அவர், தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேசம் தொடர்பாக முதலமைச்சர் நல்ல முடிவெடுப்பார் என்றார்.
மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார செண்பக மன்னார் ஸ்ரீ ராமனுஜர், "பட்டினப் பிரவேசம் என்பது சம்பிரதாயமான நிகழ்வு. இதை எந்த ஒரு இயக்கத்தாலும் தடுக்க முடியாது. நிச்சயம் பட்டினப் பிரவேசம் நடக்கும். யாராலும் அதை நிறுத்திவிட இயலாது. இந்து விரோத செயல்களில் ஈடுபடுவது, கோயில்களில் தலையிடுவது போன்றவற்றில் ஈடுபட்டால் அந்த அமைச்சராலும் சாலையில் நடக்க முடியாது." என எச்சரித்தார்.
திருமாவளவன் கருத்து
இந்த நிலையில் மன்னார்குடி ஜீயரின் படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "பல்லக்குத் தூக்குவது காலம் காலமாகத் தொடரும் ஒரு மரபு என்பதால் அதற்குத் தடைவிதிக்கக் கூடாது என இவர்கள் கூச்சலிடுவதற்குக் காரணம் இவர்கள் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துகிற கோட்பாடு தான். அதுதான் சனாதனம்! அல்லது பார்ப்பனியம்! இன்றையக் கூற்றுப்படி இந்துத்துவம்! அல்லது சங்கத்துவம்!" எனக் குறிப்பிட்டு உள்ளார்.