விசிகவுக்கு துணை முதல்வர் பதவி உறுதி? உயர்நிலை கூட்டத்துக்கு பிறகு வன்னி அரசு போட்ட பதிவால் பரபரப்பு
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிக்க ஆட்சியில் பங்கு மற்றும் துணை முதலமைச்சர் பதவி வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலை குழு கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், எக்ஸ் தளத்தில், "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு, இது திருமாவளவன் காலம், இனி உயர்வோம் மேலும் மேலும்!" என விசிக எம்.எல்.ஏ வன்னியரசு பதிவிட்டுள்ளது மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

போதிய பெரும்பான்மை இல்லாத காரணத்தால், தவெக ஆட்சியமைக்க போராடி வருகிறது. 108 எம்எல்ஏக்களுடன் தவெக தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், ஆட்சியமைக்க மேலும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டது. காங்கிரஸ் தனது 5 எம்எல்ஏக்களுடன் ஆதரவை தவெகவுக்கு வழங்கியது.
அதைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட திமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கு கடிதம் வாயிலாக அழைப்பு விடுத்தார். தொடர்ந்து, தவெக நிர்வாகிகள் சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் தலைவர்கள், நிர்வாகிகளை நேரில் சென்று சந்தித்து ஆதரவு கோரினர்.
சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் ஆதரவு கடிதத்தை தவெகவுக்கு அளித்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைய தவெகவுக்கு ஆதரவு என்றும் மக்களாட்சி அமையவே தவெகவுக்கு சிபிஎம், சிபிஐ ஆதரவு என்றும் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.
சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன், சிபிஎம் தலைவர் பெ. சண்முகம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம்; வெளியில் இருந்து மட்டும் ஆதரவு அளிப்போம் என்றும் சிபிஐஎம் தெரிவித்துள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் காங்கிரஸ் என இரு கட்சிகளும் தவெகவின் அமைச்சரவையில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சரவையில் விசிக சார்பில் திருமாவளவன் இடம்பெறுவார் என்றும் கூறப்படுகிறது. அவர் துணை முதல்வராக பொறுப்பேற்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சிபிஐ, சிபிஎம் தங்களின் ஆதரவை தெரிவித்துவிட்டாலும், விசிக இன்னும் தங்களின் ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகளை போல் வெளியில் இருந்து ஆதரவா அல்லது அமைச்சரவையில் இடம் கோருமா என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிக்க, ஆட்சியில் பங்கு வேண்டும் என்உம், துணை முதலமைச்சர் பதவி வேண்டும் என்றும் இன்று நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலை குழு கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியிட வாய்ப்பு வழங்கவேண்டும் என்ற குரலும் ஒலித்துள்ளது.
இந்நிலையில், எக்ஸ் தளத்தில், "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு, இது திருமாவளவன் காலம், இனி உயர்வோம் மேலும் மேலும்!" என விசிக திண்டிவனம் எம்.எல்.ஏ வன்னியரசு பதிவிட்டுள்ளது மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
விசிக பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு குழம்பிப் போயிருக்கலாம்.
எழுச்சித்தமிழர் தெளிந்த நீரோடை.
உளிகளை கொண்டு செதுக்க
அவர் வெறும் கல் அல்ல.
எழுந்து நிற்கும் இமய மலை.
நாளைய பொழுது
நமக்காய் விடியும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications