நான் பொதுவா சொன்னேங்க.. விஜய்யை சொல்லவில்லை.. விசிக திருமாவளவன் விளக்கம்
சென்னை: நான் கூறிய கருத்துகள் விஜய்க்கு எதிரானது அல்ல என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் 234 தொகுதிகளுக்கு சேர்ந்தாற் போல் சில விஷயங்களை செய்து வருகிறார். முதலில் ஏப்ரல் 14 ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளின் போது 234 தொகுதிகளிலும் உள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு தெரிவித்திருந்தார்.

அது போல் 234 தொகுதிகளிலும் பட்டினி தினத்தின் போது மதிய உணவு அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். பின்னர் தமிழகத்தில் நடந்து முடிந்த 10, 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் 234 தொகுதிகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கினார்.
அந்த விழாவில் அவர் அரசியல் குறித்து பேசியிருந்தார். அடுத்த தேர்தலில் நல்ல, புதிய தலைவர்கள் வருவார்கள். அவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். மேலும் வருங்கால வாக்காளர்களே என அழைத்திருந்தார். சில சம்பவங்களை எல்லாம் வைத்து பார்க்கும் போது விஜய் 2026 சட்டசபை தேர்தலில் அரசியலுக்கு வருவார் என கருதப்படுகிறது.
இந்த நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து தொல் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: சினிமாவில் நடித்துவிட்டால் முதல்வராகிவிடலாம் என நடிகர்கள் நினைக்கிறார்கள். நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்ற சாபக்கேடு தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது.
கேரளாவில் மம்முட்டி, கர்நாடகாவில் ராஜ்குமார், பாலிவுட்டில் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் கிடைத்த புகழை வைத்துக் கொண்டு அரசியலுக்கு வராமல் அவர்கள் தங்கள் பணிகளை செய்து வருகிறார்கள். மக்களுக்காக போராட்டம் நடத்தி சிறை சென்றவர்களை ஓரங்கட்டி விட்டு மக்களை ஹைஜாக் செய்துவிடலாம் என நினைக்கிறார்கள்.
கருத்தியல் சார்ந்த களப்பணியாற்றி அரசியலுக்கு வரலாம். இதில் தவறே இல்லை. நடிகர் விஜய் அரசியலுக்கு வரட்டும், வரவேற்கிறோம். அது போல் நல்ல எண்ணத்தின் அடிப்படையில் அம்பேத்கரையும் மாணவர்கள் படிக்க வேணடும் என கூறியிருந்த விஜய் கருத்தையும் நாங்கள் வரவேற்கிறோம். பொது வாழ்வுக்கு எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வரலாம்.
தமிழகத்தில் மட்டும்தான் மார்க்கெட்டை இழக்கும் நேரத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வர நினைக்கிறார்கள். மார்கெட் இழந்தவர்கள் அரசியலுக்கு வந்து மக்களை கவரலாம் என நினைக்கிறார்கள். மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும். சினிமா மூலம் கிடைத்த புகழ் இருந்தால் போதும் முதல்வராகிவிடலாம் என சில நடிகர்கள் நினைக்கிறார்கள். இவ்வாறு திருமாவளவன் விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு எதிராக நான் பேசவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் நான் யாரையும் காழ்ப்புணர்ச்சியோடு விமர்சிக்கவில்லை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக சொன்ன போதும் நான் வரவேற்றேன். தற்போது விஜய் அரசியலுக்கு வருவார் என யூகங்களால் செய்திகள் வெளியான போதும் நான் வரவேற்றேன்.
ஆனால் தமிழகத்தில் இது போன்ற ஒரு உளவியல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பல மேடைகளில் கலைஞர்கள் கூட பாடியிருக்கிறார்கள். தமிழர்கள் தங்கள் முதல்வர்களை திரையரங்குகளில் தேடுகிறார்கள் என்று பாடியுள்ளனர். அதற்கு காரணம் தமிழக அரசியல் நீண்ட காலமாகவே திரையுலக்தை சார்ந்ததாக இருக்கிறது.
திரையுலக நட்சத்திரங்களை முன்னிறுத்தியே பிரச்சாரம் செய்யும் நிலை உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் சினிமா நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆந்திராவில் என்டிஆர் அரசியலுக்கு வந்தார். ஆனால் மற்ற மாநிலங்களில் எந்த சூப்பர்ஸ்டாரும் வரவில்லை. சினிமாவில் இருக்கும் செல்வாக்குடன் அரசியலுக்கு வந்துவிடலாம் என மற்ற மாநிலத்தில் யாரும் செயல்படவில்லை.
இந்த விமர்சனங்களைத்தான் நான் முன்வைத்தேனே தவிர நடிகர் விஜய்க்கு எதிராக விமர்சனங்களை நான் முன் வைக்கவில்லை. இது பொதுவான விமர்சனம். நல்லகண்ணு போன்ற தலைவர்கள் விடுதலை போராட்ட காலத்தில் சந்தித்த கொடுமைகளையும் சிறைச்சாலை டார்ச்சர்களையும் நாம் அறிவோம் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications