ஜோதிடர் ராதன் பண்டிட்டின் நியமனம் ஏற்புடையதல்ல! வேளச்சேரிக்கு விஜய் வந்ததும் விசிக எம்பி ட்வீட்
சென்னை: ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விசிக ரவிக்குமார் எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சரியாக விஜய், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனின் வேளச்சேரி இல்லத்திற்கு சென்ற அதே நேரத்தில், ரவிக்குமார் எம்பியும் ட்வீட்டில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ராதன் பண்டிட் ஜோதிடர் மட்டுமல்லாமல் தவெகவின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்து வருகிறார். விஜய்யுடன் சுமார் 7 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். விஜய் கட்சிக்கு எந்த பெயரை வைப்பது, அவர் எந்த நேரத்தில் கூட்டணி குறித்து பேசுவது, எந்த தொகுதியில் போட்டியிடுவது உள்ளிட்டவைகளை இவர்தான் கணித்து கூறிவந்தார்.
தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்ட நாளில் காலை 9.15 மணிக்கெல்லாம் விஜய் பெரும்பான்மையான இடங்களில் முன்னணியில் இருப்பார் என தெரிவித்திருந்தார். அதே போல் ஆரம்பத்தில் திமுக முன்னிலை வகித்தாலும் போக போக 9.15 மணிவாக்கில் தவெகதான் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது.
இந்த நிலையில் முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை நியமித்து முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி (Special Officer - Political Wing) பதவி என்பது அரசியல் மற்றும் நிர்வாக ஒருங்கிணைப்பை கவனிக்கும் முக்கிய பொறுப்பாக கருதப்படுகிறது.
இந்தப் பொறுப்பில் இருப்பவர் பொதுவாக முதல்வரின் அரசியல் நடவடிக்கைகள், கட்சி தொடர்புகள் மற்றும் தகவல் பரிமாற்றங்களை ஒருங்கிணைப்பார்.
அவரின் முக்கிய பணிகள் பின்வருமாறு இருக்கலாம்.
- முதல்வரின் அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் சந்திப்புகளை ஒருங்கிணைத்தல்
- கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சிகள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களுடன் தொடர்பு பேணுதல்
- அரசியல் நிலவரங்கள் குறித்து முதல்வருக்கு தகவல் மற்றும் ஆலோசனை வழங்குதல்
- ஊடகங்களில் வெளியாகும் அரசியல் செய்திகள் மற்றும் எதிர்வினைகளை கண்காணித்தல்
- கட்சியின் செய்தி பரப்பல் மற்றும் பொது தொடர்பு நடவடிக்கைகளில் உதவுதல்
- தேர்தல் மற்றும் அரசியல் தந்திர ஆலோசனைகளில் பங்கேற்பது
- முதல்வரின் அலுவலகம் மற்றும் கட்சி அமைப்புகளுக்கு இடையே இணைப்புப் பாலமாக செயல்படுதல்
இந்தப் பதவி அதிகாரப்பூர்வ நிர்வாகப் பொறுப்பையும், அரசியல் நம்பகத்தன்மையையும் ஒருங்கே கொண்டதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஜோதிடம் பார்த்த ஒரு நபருக்கு இந்த பதவியை கொடுத்ததற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தை பதிவிட்டுள்ளார். அதில் அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. முதல்வரின் அரசியல் பிரிவு செயலாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ள ரிக்கி ராதன் பண்டிட் என்பவர் அடிப்படையில் ஒரு ஜோதிடர்.
அரசுச் செலவில் அதிகாரியாக இத்தகைய ஒருவரை நியமித்திருப்பது, மக்கள் மத்தியில் ஜோதிடம் தொடர்பான நம்பிக்கையை அதிகப்படுத்தவே உதவும். "ஜோதிடம் தனை இகழ்" என்றார் பாரதியார். அரசின் இந்தப் பணி நியமனம் ஏற்புடையதல்ல!
இவர் அரசியல் ஆலோசனைகளை கூறுவார் என்பதும் ஏற்புடையதல்ல என விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் பலரும் மக்கள் வரிப்பணத்தில் ஜோதிடருக்கு இத்தனை லட்சங்கள் ஊதியம் கொடுக்கப்பட வேண்டுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
அது போல் விசிக ரவிக்குமார் தனது கண்டன ட்வீட்டில் மதச்சார்பற்ற அரசில் இது ஏற்கத்தக்கதல்ல. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications