ஆர்டிஓ ஆபிஸ்க்கு நேரில் போக வேண்டாம்.. 2 நாளில் வாகனங்களுக்கு பெர்மிட்.. விரைவில் வருது புதிய வசதி
சென்னை: போக்குவரத்து உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான, 'பெர்மிட்' ஆன்லைனில் பெறும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வசதி அமலுக்கு வந்த பிறகு, விண்ணப்பித்த இரண்டு நாளில் பெர்மிட்களை வாகன உரிமையாளர்கள் பெற முடியும்.
தமிழகம் முழுவதும் சுமார் 150 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்.டி.ஓ), யுனிட் அலுவலங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களுக்கு சென்று நாள்தோறும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாகனங்களுக்கு புதிதாக பெர்மிட் வாங்குவதற்காக விண்ணப்பித்து வருகிறார்கள். இந்த பெர்மிட்களை வாங்குவதற்கு குறைந்தது ஒருவாரம் முதல் 10 நாட்கள் வரை ஆகின்றன.

நேரில் போய் விண்ணப்பித்துவிட்டு ஒருவாரம் வரை பெர்மிட் பெற காத்துக்கிடக்க வேண்டியிருப்பதால் வாகன உரிமையாளர்கள் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது. இதனால், பெர்மிட் வாங்கும் வசதியையும் ஆன்லைனில் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில்தான், ஆட்டோல், கால் டாக்சி, மினி வேன், பேருந்து போன்ற போக்குவரத்து வாகனங்களுக்கான பெர்மிட்டை ஆன்லைனில் வழங்கும் திட்டத்தை விரைவில் கொண்டு வர போக்குவரத்து ஆணையகரம் முடிவு செய்து இருக்கிறது. இது தொடர்பாக போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:- வாகன போக்குவரத்துக்கான டாக்குமெண்ட்களை tnsta.gov.in என்ற வெப்சைட்டில் பெறும் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பேருந்து, ஆட்டோ, வேன், லாரி போன்ற போக்குவரத்து வாகனங்களுக்கான புதிய பெர்மிட், ஆர்டிஓ அலுவலகங்களில் நேரில் வழங்கப்படுகிறது. நேரில் சென்று விண்ணப்பிப்பதால், வாகனங்களின் ஆவணங்களை சரிபார்த்து, உறுதி செய்து பெர்மிட் வழங்குவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், வாகனங்களுக்கான் பெர்மிட்டையும் ஆன்லைனில் பெறும் வசதி கொண்டு வரப்பட இருக்கிறது.
இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அடுத்த சில மாதங்களில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த வசதி அமலுக்கு வந்த பிறகு, பெர்மிட் கிடைப்பதற்கு 10 நாள் வரை ஆகாது. ஆன்லைனில் விண்ணப்பித்த இரண்டு நாட்களில் பெர்மிட் கிடைத்து விடும்" என்றனர். சொந்த பயன்பட்டிற்கு இல்லாமல் ஆட்டோ, கால்டாக்சி, பேருந்து போன்ற கமர்ஷியல் நோக்கங்களுக்காக இயக்கப்படும் வாகனங்களுக்கு பெர்மிட் பெறுவது அவசியம். இத்தகைய பெர்மிட்டை வாகன உரிமையாளர்கள் நேரில் சென்று வாங்கும் நடைமுறை இருந்து வருகிறது.
இந்த நிலையில் தான், காலதாமதத்தை குறைக்கும் வகையிலும் பெர்மிட் பெறும் நடைமுறையை எளிதாக்கும் விதமாக ஆன்லைனில் கொண்டு வரும் வசதியை கொண்டு வர போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. ஆன்லைனில் பெர்மிட் பெறும் வசதி வந்தால், விரைவாக பெர்மிட் பெற முடியும் என்பதோடு , வாகன ஓட்டிகளின் சிரமமும் பெருமளவில் குறையும் என்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications