எத்தனை தடைகள் வந்தாலும் தடையை மீறி வேல் யாத்திரை நடத்துவோம்... எல்.முருகன்
தடைகளை மீறி திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடத்துவோம் என்று பாஜக மாநில தலைவர் எல். முருகன் கூறியுள்ளார். டிசம்பர் 6ஆம் தேதி திருச்செந்தூரில் வேல் யாத்திரை நிறைவடையும் என்றும் கூறியுள்ளார் எல். முருகன்.
சென்னை: எத்தனை தடைகள் வந்தாலும் திட்டமிட்டபடி தமிழகத்தில் வேல் யாத்திரை நடைபெறும் என்று பாஜக மாநிலத்தலைவர் எல். முருகன் கூறியுள்ளார். நவம்பர் 17ஆம் தேதி முதல் வேல் யாத்திரை மீண்டும் தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி திருச்செந்தூரில் திட்டமிட்டபடி யாத்திரை நிறைவடையும் என்றும் கூறியுள்ளார் எல். முருகன்.
தமிழகத்தில் பாஜக கடந்த நவம்பர் 6ஆம் தேதி முதல் வேல் யாத்திரை நடத்தி வருகிறது. வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வில்லை என்றாலும் திருத்தணியில் தொடங்கி மாநிலத்தின் பல பகுதிகளில் வேல் யாத்திரை நடத்தி
வருகிறது பாஜக.
பாஜக மாநிலத்தலைவர் எல். முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடத்தப்பட்டது கொரோனா தடை உத்தரவையும் மீறி ஏராளமானோர் பங்கேற்றனர். அனைவரையும் கைது செய்த காவல்துறையினர் மாலையில் விடுதலை செய்தனர். தொடர்ந்து பல பகுதிகளில் வேல் யாத்திரை நடத்துபவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.
பாஜகவின் வேல் யாத்திரைக்கு முதல்வர் வைத்த ஆப்பு... அரசியல் மத கூட்டங்களுக்கு கட்டுப்பாடு நீடிப்பு
உயர்நீதிமன்றம் கண்டனம்
வேல் யாத்திரை நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து பாஜக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது ஆன்மீக யாத்திரை அல்ல அரசியல் யாத்திரை என்று உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. முருகனின் கையில் உள்ள வேல் ஆயுதமே என்றும் ஆயுதத்தை வைத்து யாத்திரை நடத்துவது ஏன் என்றும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தடைகளை மீறுவோம்
இந்த நிலையில் வரும் 30ஆம் தேதி வரை தமிழகத்தில் அரசியல், மத கூட்டங்களில் 100 பேர் வரை பங்கேற்க தடை விதித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எல். முருகன், வேல் யாத்திரை தடைகளை மீறி நடைபெறும் என்று கூறியுள்ளார்.
தீபாவளிக்கு விடுமுறை
கடந்த 2 தினங்களாக வேல் யாத்திரை நடத்தப்பட வில்லை நவம்பர் 17ஆம் தேதி முதல் மீண்டும் வேல் யாத்திரை நடைபெறும். மத்திய அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் யாத்திரையில் பங்கேற்கின்றனர்.
டிசம்பர் 6ல் நிறைவு
வேல் யாத்திரை டிசம்பர் 6ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவடையும். வீட்டில் இருப்பவர்களை தடுப்பு காவலில் வைப்பது நியாயமில்லை. சாலை, கோயில், வீட்டில் இருப்பவர்களை எல்லாம் அரசு முன்னெச்சரிக்கையாக கைது செய்வதை ஏற்க முடியாது.
கூட்டம் நடத்த தடையா?
வேல் யாத்திரை செல்லும் இடங்களில் அதிக கூட்டம் கூடுவதாக முதல்வர் பழனிச்சாமி புகார் தெரிவித்துள்ளார். பாஜக கூடினால் மட்டும் வழக்கு, கைது நடவடிக்கை பாய்கிறது. தமிழக அரசு ஏன் வேல் யாத்திரையை தடுக்கிறது என்று தெரியவில்லை.
தடையை மீறுவோம்
தேர்தல் வரக்கூடிய தமிழகத்தில் கூட்டம் நடத்தாமல் எப்படி இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய முருகன், அதிமுக உடனான கூட்டணி வேறு, கொள்கைகள் வேறு என்று கூறினார். தடைகளை மீறி வேல் யாத்திரை நடத்துவோம் என்றும் முருகன் தெரிவித்துள்ளார்.