வேளச்சேரி டூ பரங்கிமலை ரயில் சேவை இன்று தொடங்காது! 17 ஆண்டு கால திட்டத்தில் மீண்டும் தடங்கல்!
சென்னை: சென்னை நகரின் தென்பகுதியில் பயணிகளால் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான எம்ஆர்டிஎஸ் (மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம்) ரயில் சேவை நீட்டிப்பு திட்டம் இன்று தொடங்க இருந்தது. ஆனால், ரயில்வே பாதுகாப்பு ஆணையரால் கண்டறியப்பட்ட சில தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக இந்த சேவை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த 5 கிலோமீட்டர் நீளமுள்ள எம்ஆர்டிஎஸ் நீட்டிப்புத் திட்டம் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 17-18 ஆண்டுகளாக தாமதமாகி வந்த இத்திட்டம் கடந்த நவம்பர் மாதத்தில் முடிவடைந்தது.

தண்டவாள அமைப்பு, ஓவர்ஹெட் இக்விப்மெண்ட், மின்மயமாக்கல், சிக்னல் அமைப்பு, இன்டர்லாக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த நவம்பர் 7 மற்றும் டிசம்பர் 15 ஆகிய தேதிகளில் சரக்கு ரயில் சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. மார்ச் 5ஆம் தேதி தலைமை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஜனக் குமார் கார்க் அதிவேக சோதனை ஓட்டத்தை நடத்தி ஆய்வு செய்தார்.
தெற்கு ரயில்வே, மார்ச் 10 முதல் இச்சேவை தொடங்கும் என்று கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனால் வேளச்சேரி, அடம்பாக்கம், புழுதிவாக்கம், பரங்கிமலை பகுதி மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.
இந்த நீட்டிப்பால் சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை நேரடி எம்ஆர்டிஎஸ் இணைப்பு கிடைக்கும். தென்சென்னை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும், பயண நேரம் கணிசமாக குறையும், புறநகர் ரயில் சேவையுடன் எளிதான இடமாற்றம் சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மார்ச் 5ஆம் தேதி நடந்த ஆய்வின்போது சில தொழில்நுட்ப சிக்கல்கள் கண்டறியப்பட்டன. தலைமை பாதுகாப்பு ஆணையர் டெல்லிக்கு மார்ச் 7ஆம் தேதி சென்றுவிட்டதால், தேவையான இறுதி அறிக்கை மார்ச் 9ஆம் தேதி வந்திருக்க வேண்டியிருந்தது.
அறிக்கை வராததால், சில கூடுதல் பணிகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவொரு நிபந்தனை இல்லாமல் பாதுகாப்பு அனுமதி கிடைக்கும் வரை சேவை தொடங்க முடியாது என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
ஒரு அல்லது இரண்டு நாட்களில் அறிக்கை வந்த பிறகு கூடுதல் பணிகள் முடிந்ததும் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒத்திவைப்பால் பயணிகள் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
ஏற்கனவே எழும்பூர் ரயில் நிலைய புனரமைப்பு பணிகள் காரணமாக புறநகர் ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தாமதம் சென்னை மக்களின் அன்றாட பயணத்தை மேலும் சிரமப்படுத்தியுள்ளது. தெற்கு ரயில்வே விரைவில் பிரச்சனைகளை தீர்த்து சேவையை தொடங்கும் என்று நம்பப்படுகிறது.
இன்றைய தினம் இந்த ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்த்து பயணிகள் காத்திருந்தனர். ஆனால் இந்த பயணம் ஒத்தி வைப்பு என்ற அறிவிப்பால் ஏமாற்றமடைந்தனர்.












Click it and Unblock the Notifications